கோபி: கோபி அருகே அரசூரில் மினி கிளினிக் திறப்பு விழாவில் பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அளித்த பேட்டி: 7.5 சதவீத இட ஒதுக்கீடு காரணமாக அரசு பள்ளி மாணவர்கள் 405 பேர் மருத்துவப்படிப்பில் சேர்ந்துள்ளனர். இதை 10 சதவீதமாக உயர்த்த பலரும் கோரிக்கை வைத்துள்ளனர். முதல்கட்டமாக 7.5 சதவீதம் கொண்டு வரப்பட்டுள்ளது. 10 சதவீதமாக உயர்த்துவது குறித்து முதலமைச்சர்தான் பரிசீலிக்க வேண்டும். தேசிய இளைஞர் தின திறனாய்வு போட்டியில் தமிழ் மொழி புறக்கணிக்கப்படவில்லை. தமிழகத்தில் திறனாய்வு தேர்வு வினா தமிழ், ஆங்கிலத்தில்தான் கேட்கப்பட வேண்டும் என்று அனைத்து துறை அதிகாரிகளுக்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது என்றார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறுகையில், சட்டமன்றப் பொதுத் தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் அட்டவணை வெளியிட்ட பின்பு பள்ளி மாணவர்களுக்கு பொதுத் தேர்வு எப்போது நடத்துவது என்பது குறித்து முதல்வருடன் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். பொதுத்தேர்வு குறித்த அட்டவணை, சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு பிறகு வெளியிடப்படும் என்றார்.