மதுரை: மதுரை கரும்பாலையைச் சேர்ந்த கார்த்திகேயன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், என் மகள் தமிழ் அருவி. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக கல்லூரியில் பிஎஸ்சி (விவசாயம்) படிப்பதற்காக ஆன்லைனில் விண்ணப்பித்தார். அருந்ததியினருக்கான 3 சதவீத உள் இட ஒதுக்கீட்டின்படி என் மகளுக்கு சீட் கிடைத்திருக்க வேண்டும். அதை முறையாக பின்பற்றாததால், பலரது வாய்ப்பு பறிபோயுள்ளது என கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.வேல்முருகன், ஜி.இளங்கோவன் ஆகியோர், கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கையில் அருந்ததியினருக்கான 3 சதவீத உள்இடஒதுக்கீட்டை முறையாக பின்பற்றவில்லை எனத்தெரிகிறது. எனவே, மதுரையிலுள்ள வேளாண் கல்லூரியில் ஒரு இடத்தை காலியாக வைத்திருக்க வேண்டும். ஒருவேளை மாணவர் சேர்க்கை முடிந்திருந்தால், பல்கலைக்கழகத்தின் கீழுள்ள வேறொரு வேளாண் கல்லூரியில் ஒரு இடத்தை காலியாக வைத்திருக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.