அவனியாபுரம்: சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் நிருபர்களிடம் நேற்று கூறுகையில், ‘‘மூன்றாம் கட்ட பரப்புரையை முடித்து வந்திருக்கிறேன். பிரசாரங்களில் மக்கள் நலத் திட்டங்கள் குறித்துப் பேசுவதுதான் முக்கியம். நான் ஏற்கனவே ஆட்சியாளர்களின் லஞ்சப் பட்டியலை கூட்டங்களில் வெளியிட்டு உள்ளேன். இனி ஊழல் பட்டியல் தயார் செய்ய நிறைய வேலை இருக்கிறது. தேர்தல் பரப்புரையில் மக்கள் நலத்திட்டங்கள் குறித்துப் பேசுவது முக்கியம். மற்றவர்களை வைதல் என்பது வேறு. மக்கள் நலத்திட்டங்கள் குறித்துப் பேசுவதற்கு இடையில், சுவாரஸ்யத்திற்காக ஊழல் குறித்துப் பேசும்போது, மக்கள் தங்களுக்குத் தெரிந்த விஷயமாக கருதி குலுங்கி குலுங்கி சிரிக்கிறார்கள். பண பலம், அதிகார பலம் தாண்டி நாங்கள் மக்கள் பலத்தையே நம்பி இருக்கிறோம்’’ என்றார்.