×

ஜெயலலிதா முதல்வராக வர துணை நின்ற தொகுதிதான் ஸ்ரீரங்கம் : ரங்கநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்த பின் முதல்வர் பழனிசாமி பேச்சு!!

திருச்சி :தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 2 நாள் தேர்தல் பிரசார சுற்றுப்பயணமாக திருச்சிக்கு சென்றுள்ளார்.முதல்வர் பழனிசாமி இன்று காலை 8 மணிக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். முதல்வருக்கு கோயில் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் கோயில் யானைக்கு பழங்கள் வழங்கி முதல்வர் ஆசி பெற்றார். தரிசனம் முடிந்து வெளியே வந்த முதல்வர் ராஜகோபுரம் அமைக்கப்பட்டிருந்த பிரசார மேடையில் கொட்டும் மழையில் பேசியதாவது:

தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைந்தாலும் புகழ் சேர்க்கும் தொகுதியாக ஸ்ரீரங்கம் தொகுதி இருக்கிறது. ஜெயலலிதா முதல்வராக வர துணை நின்ற தொகுதிதான் ஸ்ரீரங்கம். இந்த தொகுதியில் சிறந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. ₹100 கோடிக்கு புதிய கொள்ளிடம் பாலம் மற்றும் வண்ணத்துப்பூச்சி பூங்கா, அதே போல் வேலைவாய்ப்பு வழங்கக்கூடிய டிஎன்பிஎல் நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. அதனை விரிவுபடுத்த தற்போது ₹2,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தேசிய சட்டக் கல்லூரி, தோட்டக்கலை கல்லூரி, திருவானைக்கோவில் புதிய மேம்பாலம் கொண்டுவரப்பட்டுள்ளது. முக்கொம்பு கதவணை பழுது ஏற்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகிறது. 4 மாதங்களில் அந்த பணிகள் முடிவடைந்து பயன்பாட்டுக்கு வர உள்ளது. ஸ்ரீரங்கத்தில் யாத்ரி நிவாஸ் கட்டப்பட்டுள்ளது. குடிசை மாற்று வாரியம் மூலம் வீடுகள் கட்டி தரப்பட்டுள்ளது. இவ்வளவு திட்டங்களும் ஸ்ரீரங்கத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு முன்மாதிரி தொகுதியாக செயல்படுகிறது.

சட்டமன்றத்தில் ஆட்சியில் அமர பெரும்பான்மை கிடைக்க இந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும். அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள். ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 2500 ரூபாய் வழங்கப்படுகிறது. பணம் மற்றும் பொங்கல் தொகுப்பை பெற்று மகிழ்ச்சியோடு தைப்பொங்கலை கொண்டாடுங்கள், இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Srirangam ,Palanisamy ,Chief Minister ,speech ,Jayalalithaa ,Ranganathar ,darshan ,Sami , Jayalalithaa, Chief Minister Palanisamy, speech
× RELATED போலீஸ்காரர் மீது தாக்குதல்: திருச்சியில் பரபரப்பு