மங்களூரு: தென்கனரா மாவட்டத்தில் உள்ள கடற்கரைக்கு இன்று முதல் இரண்டு நாட்கள் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவலால் கடந்த மார்ச் முதல் நாடே ஸ்தம்பித்துள்ளது. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால், மீண்டும் அனைவரும் தங்களின் பணிகளை தொடங்கியுள்ளனர். இந்நிலையில் இங்கிலாந்தில் உருமாற்று கொரோனா தொற்று பரவத்தொடங்கியுள்ளது. இதனால் மீண்டும் நிலை மாறிவிடுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர்.
இந்நிலையில், பிரிட்டனில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கோவிட் -19 இன் புது வகை கொரோனா பரவுவதை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புத்தாண்டில் பொதுமக்கள் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் சுற்றுலா தலங்களுக்கு சென்று மகிழ்வது வழக்கம். இதனால் தொற்று ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது. எனவே தென்கனரா மாவட்ட நிர்வாகம் இன்று மதியம் 12 மணி முதல் ஜனவரி 2ம் தேதி மதியம் வரை மாவட்டத்தில் உள்ள கடற்கரைக்கு சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. உல்லால், சோமேஷ்வர், மொகவீரபட்னா, பனம்பூர், தன்னீர்பாவி, சசிஹித்லு மற்றும் சூரத்கல் ஆகிய இடங்களும் அடங்கும். மேலும் மீனவர்கள் கடலுக்கு செல்லலாம் அவர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது.