தங்கவயல்: தங்கவயல், தங்க சுரங்க தொழிலாளர்கள் குடியிருப்புகள் மட்டுமின்றி நகர பகுதிகளிலும் தெரு விளக்குகள் பழுதடைந்துள்ளதால் தங்கவயல் இருள் நகரமாக மாறி வருகிறது. தங்கவயல் நகரின் முக்கிய இதய பகுதியாக இருப்பது ராபர்ட்சன்பேட்டை பகுதியாகும். இங்கு சுராஜ் மல் சதுக்கத்தில் போக்குவரத்து சிக்னல் உள்ளது. இந்த சதுக்கத்தில் ஐ மாஸ் மின் விளக்கு கோபுரம் உள்ளது. அதை அடுத்து காந்தி சதுக்கத்திலும், இதே போல் ஐ மாஸ் மின் விளக்கு கோபுரம் உள்ளது. இவை இரண்டுமே கடந்த பல நாட்களாக பழுதடைந்து மின் விளக்குகள் எரியாமல் உள்ளது. வாகன போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டம் எப்போதும் அதிகமாக உள்ள இந்த பகுதியில் ஐ மாஸ் விளக்குகள் எரியாமல் உள்ளதை பல நாட்களாகியும் கண்டு கொள்ளாமல் இருப்பதை கண்டு பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து ஐ மாஸ் விளக்கை பழுது நீக்கி சீராக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை.