புதுடெல்லி: தேசிய தலைநகரில் பல பகுதிகளில் அதிக அளவு அம்மோனியா கலந்த அசுத்தமான குடிநீர் வழங்கப்படுவதாக டெல்லி பாஜ தலைவர் ஆதேஷ் குப்தா குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய குப்தா கூறியதாவது: முதல்வர் கெஜ்ரிவால் டெல்லி மக்களுக்கு 24மணிநேரமும் சுத்தமான குடிநீரை வழங்குவதாக வாக்குறுதி அளித்தார். ஆனால், டெல்லியில் அம்மோனியா கலந்த நச்சுத்தன்மையுள்ள அசுத்தமான குடிநீரை விநியோகித்து அவற்றை பருகும் நிலைக்கு நகரவாசிகள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். அதேசமயத்தில் முதல்வர் கெஜ்ரிவால் வடிகட்டிய சுத்தமான நீரை பருகி வருவது துரதிஷ்டவசமானது.
இந்த குளிர்காலத்தில் கூட டெல்லி மக்கள் குடிநீர் பற்றாக்குறையை எதிர்கொள்கிறார்கள் என்பதில் ஆச்சரியமில்லை. குறிப்பாக, ப்ரீத் விகார், மயூர் விகார் மற்றும் வசந்த் விகார் போன்ற பல பகுதிகளில் குழாய் குடிநீர் அசுத்தம் கலந்து வருகிறது. டெல்லியில் 13 பொதுவான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் மூன்று மட்டுமே வேலை செய்கின்றன. டெல்லியில் உள்ள 22 வடிகால்களில் பதினான்கு கால்வாய்கள் மூடப்படாமல் உள்ளதோடு, கழிவுநீரை நேரடியாக வடிகால்வாய்களில் கலக்க செய்யப்படுகிறது. இவ்வாறு குற்றம்சாட்டினார்.