×

கோவாவில் இனிமேல் கஞ்சா பயிரிடலாம்

பானாஜி: போதை பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் கஞ்சா செடி நாடு முழுவதும் தடை செய்யப்பட்ட பொருட்கள் பட்டியலில் உள்ளது. இந்நிலையில், கோவாவில் ஆளும் பாஜ அரசு, கஞ்சா செடி பயிரிடுவதை சட்டப்பூர்வமாக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு சட்ட ரீதியான ஒப்புதலை அம்மாநில சட்டத்துறை வழங்கி உள்ளது. இது குறித்து சட்ட துறை அமைச்சர் நிலேஷ் கேப்ரல் அளித்த பேட்டியில், ‘‘மருத்துவ பயன்பாட்டிற்காக மட்டுமே கஞ்சா பயிரிட அனுமதி வழங்கப்படும். இதுதொடர்பாக மாநில சுகாதாரத்துறை வழங்கிய பரிந்துரைக்கு ஒப்புதல் அளித்துள்ளோம்’’ என்றார். முன்னதாக மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் நேற்று முன்தினம் அளித்த பேட்டியில், ‘‘கஞ்சா பயிரிட அனுமதிக்கக்கோரி அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக எந்த அனுமதியும் இதுவரை வழங்கப்படவில்லை’’ என்றார். இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஏற்கனவே மாநிலத்தில் போதைப் பழக்கம் பெருகி வரும் நிலையில் கஞ்சா பயிரிட அனுமதிப்பது இளைய தலைமுறையினரை மிகவும் பாதிக்கும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.



Tags : Goa , Cannabis can now be grown in Goa
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...