புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்துவிட்டது. நேற்று புதிதாக 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் கவர்னர் மாளிகை ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இந்த சம்பவத்துக்கு பிறகு, கவர்னர் கிரண்பேடி வெளியே வருவதை முற்றிலுமாக தவிர்த்து வந்தார். அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்சிங் முறையில் மட்டுமே ஆலோசனை நடத்தினர். இதற்கிடையே கவர்னர் மாளிகையில் பணியாற்றும் கவர்னரின் உதவியாளர் ஈஷா அரோராவுக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததால், கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் தொற்று உறுதியானதை தொடர்ந்து, ஜிப்மர் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிரண்பேடியின் சமூக வலைதளங்களை கையாளும் பொறுப்பையும் உதவியாளர் ஈஷா அரோரா கவனித்து வந்தார். இதன்காரணமாக கவர்னர் கிரண்பேடிக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து கவர்னர் மாளிகையில் முதல் மாடியில் பணியாற்றும் 25 ஊழியர்களுக்கு சுகாதார துறையினர் நேற்று பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். அனைவரையும் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.