புதுச்சேரி: புதுச்சேரி டிஜிபி பாலாஜி ஸ்ரீவத்சவா, கூடுதல் டிஜிபி ஆனந்தமோகன், மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க் ஆகியோர் கூட்டாக நேற்று அளித்த பேட்டி: புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறை செய்து வருகிறது. குறிப்பாக 31ம் தேதி (இன்று) மதியம் 2 மணிவரை வாகனங்கள் வழக்கம்போல் ஒயிட்டவுன் பகுதிக்குள் அனுமதிக்கப்படும். 2 மணிக்கு மேல் 1ம் தேதி (நாளை) காலை 9 மணி வரை நான்கு மற்றும் இருசக்கர வாகனங்கள் உள்ளே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இப்பகுதிக்குள் வசிக்கும் மக்கள் வெளியே சென்று வர ஏதுவாக பாஸ் (அடையாள அட்டை) வழங்கப்படும். இங்கு தங்கியுள்ள சுற்றுலா பயணிகளுக்கு தனி அடையாள அட்டை வழங்கப்படும். ஓட்டல்கள், உணவகங்கள், பீச் ரிசார்ட்டுகளில் கொண்டாட்டங்களுக்கு அனுமதியில்லை. மாநில எல்லைகளான கனகசெட்டிக்குளம், முள்ளோடை, மதகடிப்பட்டு வழியாக புதுச்சேரிக்குள் நுழையும் சுற்றுலா பயணிகள் தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். கடற்கரை சாலைக்கு வருபவர்கள் கடலில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.