புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தில் கடந்த நவம்பரில் திருமணத்துக்காக கட்டாய மத மாற்றம் செய்யப்படுவதை தடுப்பதற்காக அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என இம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் 104 பேர் கூட்டாக கடிதம் எழுதியுள்ளனர். அதில் அவர்கள், ‘கங்கை-யமுனை நாகரீகத்தின் தொட்டில் என்று அறியப்பட்டு வந்த உத்தரப் பிரதேசம், அரசின் சர்ச்சைக்குரிய திருமண கட்டாய மத மாற்ற தடை சட்டத்தின் காரணமாக வெறுப்பு, பிரிவினை மற்றும் மதவெறி அரசியலின் அடையாளமாக மாறியுள்ளது. அரசின் நிர்வாக அமைப்புகள் இப்போது வகுப்பு வாதம் என்னும் கொடிய விஷத்தில் மூழ்கியுள்ளது. இந்த சட்டத்தினால் அப்பாவி இளைஞர்கள் துன்புறுத்தப்படுகின்றனர். இச்சட்டத்தை அரசு திரும்பப் பெற வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது.