சேலம்: வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கேட்டு பாமகவினர் நேற்று ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் மனு கொடுக்கும் அறப்போராட்டம் நடத்தினர். பாமக தலைவர் ஜி.கே.மணி தலைமையில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் சேலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு அளித்தனர்.
பின்னர் ஜி.கே.மணி அளித்த பேட்டி: இன்னும் 2 மாதத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது. தேர்தல் வந்தால் இது நடக்காமல் போய்விடும். இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக இட ஒதுக்கீட்டை அரசு அறிவிக்கவேண்டும். ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நிலைப்பாடு உள்ளது. அதிமுக முதல்வர் வேட்பாளரை அறிவித்துள்ளது.
தேர்தல் நேரத்தில் முதல்வர் வேட்பாளர் குறித்து ராமதாஸ் அறிவிப்பார். அதிமுகவுடன் கூட்டணி சேரும்போது இடஒதுக்கீடு கேட்டோம். அதன் பிறகு பலமுறை முதல்வரை சந்தித்து வலியுறுத்தினோம். ஆனால் இதுநாள்வரை அவர்கள் இடஒதுக்கீட்டை வழங்கவில்லை. இவ்வாறு ஜி.கே. மணி கூறினார்.