கோலார்: கோலார் மாவட்டத்தில் செயல்படுத்தி வரும் கே.சி.வேலி மற்றும் எச்.என்.வேலி ஆகிய திட்டங்கள் மெத்தனமாக செயல்படுத்துவது குறித்து முதல்வர் தலைமையில் ஆலோசனை நடத்த வேண்டும் என்று பாஜ மேலவை உறுப்பினர் என்.ஒய்.நாராயணசாமி வலியுறுத்தினார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ``வறட்சியை போக்க கே.சி.வேலி மற்றும் எச்.என்.வேலி ஆகிய திட்டங்கள் தொடங்கப்பட்டது.
இதில் கே.சி.வேலி திட்டம் மூலம் 400 எம்எல்டி மற்றும் எச்.என்.வேலி திட்டம் மூலம் 210 எம்எல்டி தண்ணீர் வழங்கும் பொறுப்பு பெங்களூரு குடிநீர் மற்றும் கழவுநீர் வடிகல் வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் வாரியத்தின் மெத்தனம் காரணமாக கே.சி.வேலி திட்டத்தில் வழங்க வேண்டிய 400 எம்எல்டி தண்ணீரில் 310 எம்எல்டியும், எச்.என்.வேலி திட்டத்தில் வழங்க வேண்டிய 210 எம்எல்டியில் 100 எம்எல்டியும் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலம் மாவட்டத்தில் 79 ஏரிகள் மற்றும் 98 தடுப்பணைகள் மட்டும் நிரம்பியுள்ளது. இன்னும் 50 சதவீதத்திற்கு மேல் ஏரிகள் நிரம்ப வேண்டும். இது தொடர்பாக பெங்களூரு குடிநீர் வாரிய தலைவர் உள்பட அதிகாரிகளுடன் முதல்வர் எடியூரப்பா ஆலோசனை நடத்தி திட்டத்தை துரிதப்படுத்த வேண்டும்’’ என்றார்.