சாம்ராஜ்நகர்: அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மருத்துவர் நியமனம் செய்ய வேண்டும் என்று கிராமத்தினர் மாவட்ட கலெக்டர் எம்.ஆர்.ரவியிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். சாம்ராஜ்நகர் மாவட்டம் அக்ரஹாரா கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார மையம் அமைந்துள்ளது. இதில் பல வருடங்களாக மருத்துவர் கிடையாது. ஆனால் நர்ஸ் மட்டும் பணி அமர்த்தப்பட்டுள்ளார். இவர் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரை வழங்கி வருகின்றார்.
இதனால் மருத்துவமனைக்கு டாக்டர் நியமனம் செய்ய வேண்டும் என்று கிராமத்தினர் மாவட்ட கலெக்டர் எம்.ஆர்.ரவியிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். இது தொடர்பாக கிராமத்தினர் கூறியதாவது: கிராமத்தில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார மையத்துக்கு கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த மக்கள் சிகிச்சைக்காக வருகின்றனர். அப்படி வரும் போது மருத்துவர் இல்லாத காரணத்தால் நர்ஸ் மருந்து மாத்திரைகள் வழங்கி வருகிறார். இதில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்வது என்று புரியவில்லை. அதே போல் மருத்துவர் வழங்க வேண்டிய சிகிச்சைகளை நர்ஸ் வழங்கி வருகிறார். இதில் மக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு சுகாதார மையத்துக்கு மருத்துவர் நியமிக்க வேண்டும் என்று கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது’’ என்றனர்.