மைசூரு: குருபர் சமூகத்தின் மீது யாருக்கு அக்கறை, நம்பிக்கை உள்ளதோ அவர்கள் போராட்டத்துக்கு வருவார்கள். இதனால் சித்தராமையா மனதை மாற்ற வேண்டிய அவசியம் கிடையாது. என்று அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்தார். மைசூருவில் இது தொடர்பாக அவர் கூறியதாவது: குருபர் சமுகத்தினருக்கு எஸ்.டி. இடஒதுக்கீடு விஷயத்தில் மடாதிபதிகளை யாராலும் திசைத்திருப்ப முடியாது. அவர்கள் தெரிவிக்கும் வழிகாட்டுதலில் நாங்கள் செல்வோம். அதே போல் குருபரை யாராலும் பிரிக்க முடியாது.
குருபர் சமூகத்தை எஸ்.டி.பிரிவில் சேர்க்க முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆதரவு வழங்கவில்லை என்பதற்காக அவருடைய மனதை மாற்ற வேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது. சமூகத்தின் மீது யாருக்கு அக்கறை, நம்பிக்கை உள்ளதோ அவர்கள் வருவார்கள். இதனால் சித்தராமையா மனதை மாற்ற வேண்டிய அவசியம் கிடையாது. அவருக்கு விருப்பம் இருந்தால் வருவார். மாநிலத்தில் கோடிக்கணக்கான மக்கள் உள்ளனர். அவர்கள் அனைவரையும் மனமாற்றம் செய்ய முடியுமா என்று கேள்வி எழுப்பினார். எங்கள் பின்னால் மடாதிபதிகள் உள்ளனர். இதனால் போராட்டம் வெற்றிபெறும் என்ற நம்பிக்கையுள்ளது. அவர்களை யாராலும் திசைத்திருப்ப முடியாது.
குருபர் சமூகத்தை எஸ்.டி.பிரிவில் சேர்க்க யாருக்கு எதிராகவும் நாங்கள் போராட்டம் நடத்தவில்லை. இது குறித்து சமுகத்தினர் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். சுதந்திர போராட்ட நேரத்தில் குருபருக்கு எஸ்.டி. இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது என்பதற்கான ஆதாரம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தகவல் பெறப்படும். மேலவை துணை தலைவர் எஸ்.எல்.தர்மேகவுடா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மனதுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார்.