சென்னை: இந்து சமய அறநிலையத்துறை கமிஷனராக கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டராக இருந்த பிராபகர் அறநிலையத்துறை கமிஷனராக நியமிக்கப்பட்டார். அவர் எடுத்த பல அதிரடி நடவடிக்கையால் அரசியல்வாதிகள், அதிகாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனால், அவருக்கு உயர் அதிகாரிகள் போதிய ஒத்துழைப்பு தரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், அவர் எதிர்பார்த்த மாற்றங்கள் எதுவும் நடைமுறைக்கு கொண்டு வர முடியவில்லை. குறிப்பாக, அறநிலையத்துறையில் ஓய்வு பெற்ற ஊழியர்களை பணியில் இருந்து விடுவிக்க முடியவில்லை. ஆணையர் அலுவலகத்திலேயே அவரால் ஓய்வு பெற்ற ஊழியர்களை மாற்றம் செய்ய முடியாத நிலை தான் இருந்தது. மேலும், கோயில்களின் திருப்பணி, நிலம் குத்தகைக்கு விடுவது, ஆக்கிரமிப்பு அகற்றுவது உள்ளிட்ட விவகாரங்களில் உயர் அதிகாரிகள் கமிஷனருக்கு தவறான தகவலை தருகின்றனர்.
இதனால், சில நேரங்களில் நீதிமன்றத்தில் அறநிலையத்துறைக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் நிலை தான் உள்ளது.மேலும், கோயில்களில் திருப்பணியில் சுணக்கம், அலுவலர் மீதான விசாரணையை முடிப்பதில் இழுபறி, நிர்வாகத்தில் குறைபாடு காரணமாக அறநிலையத்துறைக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு போன்ற காரணங்களால் கமிஷனர் பிரபாகர் அடிக்கடி விடுமுறையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கமிஷனர் பிரபாகர் மத்திய அரசு பணிக்கு செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசுக்கு ஆணையர் கடிதம் எழுதியிருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே, அவர் ஓரிரு நாட்களில் விடுவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அவ்வாறு அவர் விடுவிக்கப்படும் பட்சத்தில் புதிய ஆணையர் நியமிக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் கோடிக்கணக்கான கோயில் நிலங்களை கைப்பற்றும் நடவடிக்கையில் அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் கைகோர்த்து இருப்பதும் இவரின் மாற்றத்துக்கு காரணமாக கூறப்படுகிறது.