×

7 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கு வாலிபருக்கு தூக்கு தண்டனை: புதுகை மகிளா கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் 7வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் வாலிபருக்கு தூக்கு தண்டனை விதித்து புதுகை மகிளா கோர்ட் நேற்று பரபரப்பு தீர்ப்பு அளித்தது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த ஏம்பல் கிராமத்தை சேர்ந்த 7 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 29ம் தேதி இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை. இதைத்தொடர்ந்து உறவினர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து சிறுமியின் பொற்றோர் புகாரின் பேரில், ஏம்பல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் மறுநாள் ஜூன் 30ம்தேதி மாலை ஏம்பல் ஏரியில் காட்டாமணக்கு செடிகளுக்குள் சிறுமி சடலமாக மீட்கப்பட்டாள். அப்போது, சிறுமியின் முகம், தலை மற்றும் உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்தன.

இதையடுத்து போலீசார் உடலை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணையில், சிறுமியை அப்பகுதி பூக்கடைக்காரர் சாமிவேல் என்ற ராஜா (25) என்பவர் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் ராஜாவை கடந்த ஜூலை மாதம் 1ம்தேதி கைது செய்தனர்.இது தொடர்பாக ராஜா மீது போக்சோ சட்டம், கற்பழிப்பு, கொலை செய்தல், தடயங்களை மறைத்தல், வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. அரசு தரப்பு வக்கீலாக அங்கவி ஆஜராகி வாதிட்டார். இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை நேற்று முடிந்து நீதிபதி சத்தியா இரட்டை மரண தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு அளித்தார்.

அந்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது: சிறுமியை கொலை செய்ததற்காக இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302 கீழ் மரண தண்டனையு‌ம், போக்சோ சட்டம் இரண்டு பிரிவுகள், 2019ன் பாலியல் வன்கொடுமையில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் திருத்த சட்டம் கீழ் மரண தண்டனையு‌ம், சிறுமியை கடத்தியதற்காக இந்திய தண்டனை சட்டம் கடத்தல் பிரிவு 363 கீழ் 7 வருடம் சிறை தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும், குழந்தையை கொலை செய்து விட்டு சாட்சியத்தை மறைத்ததற்காக 7வருடம் சிறை தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும், தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த குழந்தையை கற்பழித்து கொலை செய்தமைக்காக ஆயுள் வரை சிறையில் இருக்கும் தண்டனையும், அபராத தொகையை கட்ட தவறினால் 4 மாதம் கடுங்காவல் சிறை தண்டனையும் விதிக்கப்படுகிறது. மேலும் சிறுமியின் தாயாருக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடாக அரசு வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து ராஜாவை போலீசார் பலத்த பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு சென்று நேற்று இரவே அடைத்தனர்.


Tags : Adolescent ,death , 7-year-old girl raped and young men sentenced to death for killing case: New Mahila Court a judgment
× RELATED விழுப்புரம் மாவட்டத்தில் குழந்தை...