×

மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்வேன் அரசியலுக்கு வரவில்லை: ரஜினி பரபரப்பு அறிக்கை

சென்னை: புதிய கட்சித் தொடங்கப் போகிறேன், தன்னுடைய கட்சி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் என்று கூறி அரசியல் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர் ரஜினி, திடீரென்று அரசியலுக்கு வரவில்லை. மக்கள் சேவையை தொடர்ந்து செய்வேன் என்று நேற்று காலை திடீரென அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தமிழக அரசியலில் புதிய  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டப்பேரவைக்கு வருகிற ஏப்ரல் மாத இறுதியில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுக கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ளது. இதனால், மக்கள் மத்தியில் அக்கட்சி மீது கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் உள்ள பாஜ மீதும் வேளாண் மசோதா, நீட் பிரச்னை, ஜிஎஸ்டி, செம்மொழி, சமஸ்கிருதம் திணிப்பு என பல்வேறு பிரச்னைகளில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இந்த அதிருப்தியை சரிக்கட்ட வேண்டும் என்றால், தமிழகத்தில் மக்களிடம் நல்ல அறிமுகம் உள்ளவரும், அரசியல் ஆசை இருப்பதாக கூறப்பட்டு வருபவருமான ரஜினியை அரசியலுக்கு கொண்டுவர வேண்டும் என்று சிலர் முயன்றனர். குறிப்பாக பாஜ ஆதரவு தலைவர்கள் பலர் முயன்று வந்தனர்.

அதற்கு ஏற்றார்போல ரஜினியும் சென்னை அருகே உள்ள கல்லூரியில் நடந்த விழாவில் எம்ஜிஆர் சிலையை திறந்து வைத்து அரசியல் ஆசையை வெளிப்படுத்தினார். தொடர்ந்து, ரசிகர்களுடன் ஆலோசனை நடத்தி வந்தார். இதனால் அவர் கட்சி ஆரம்பிப்பார் என்று கூறப்பட்டது. அதேநேரத்தில் தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும், பிரசாரத்துக்கு வர முடியாது என்றும் ரசிகர்களிடம் தெரிவித்தார். இதனால் ரசிகர்கள், அவர் கட்சி ஆரம்பிப்பாரா? மாட்டாரா? என்ற குழப்பத்தில் இருந்தனர். ஆனால் திடீரென்று கடந்த நவம்பர் 30ம் தேதி, தான் கட்சி ஆரம்பிக்கப் போவதாகவும் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளராக பாஜவின் அறிவுசார் அமைப்பின் தலைவராக இருந்த அர்ஜூனமூர்த்தி இருப்பார் என்றும் அறிவித்தார். ஆலோசகராக தமிழருவி மணியனை நியமிப்பதாகவும் அறிவித்தார். பின்னர் திருவொற்றியூரைச் சேர்ந்த ஒருவர் மக்கள் சேவை கட்சி என்ற கட்சியை ஆரம்பித்து, ஆட்டோ சின்னம் வாங்கினார். இது ரஜினி கட்சி என்று கூறப்பட்டது. அதை ரசிகர் மன்றமும் மறுக்கவில்லை.

ஆனால், ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என்று பூடகமாகவே அறிக்கை வெளியிடப்பட்டது. இந்தநிலையில், கடந்த வாரம் ‘அண்ணாத்த’ பட சூட்டிங்கில் கலந்து கொண்டார். அப்போது, ரஜினிக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் கடந்த ஞாயிற்றுக்கிழமை ரஜினி சென்னை திரும்பினார். அவர் குணமடைந்து விட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.இந்தநிலையில் தான் அரசியலுக்கு வரவில்லை. மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்வேன் என்று நேற்று பரபரப்பு அறிக்கையை நடிகர் ரஜினி வெளியிட்டுள்ளார். இது குறித்து ரஜினி வெளியிட்டுள்ள அறிக்கை: ‘‘என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழக மக்களுக்கு எனது அன்பான வணக்கம். ஜனவரியில் கட்சி தொடங்குவேன் என்று அறிவித்து மருத்துவர்களின் அறிவுரையையும் மீறி ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஐதராபாத் சென்றேன். கிட்டத்தட்ட 120 பேர் கொண்ட படக்குழுவினருக்கு தினமும் கொரோனா பரிசோதனை செய்து ஒவ்வொருவரையும் தனிமைப்படுத்தி முகக்கவசம் அணிவித்து மிகவும் கட்டுப்பாட்டோடு இருந்தும் 4 பேருக்கு கொரோனா இருக்கிறது என்று தெரியவந்தது.

உடனே இயக்குனர் படப்பிடிப்பை நிறுத்தி எனக்கு உட்பட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்வித்தார். எனக்கு கொரோனா நெகட்டிவ் வந்தது. ஆனால் எனக்கு ரத்தக் கொதிப்பில் அதிக ஏற்றத் தாழ்வு இருந்தது. மருத்துவ ரீதியாக எக்காரணத்தைக் கொண்டும் எனக்கு ரத்தக் கொதிப்பில் தொடர்ந்து ஏற்றத் தாழ்வு இருக்கக் கூடாது. அது என்னுடைய மாற்று சிறுநீரகத்தை கடுமையாக பாதிக்கும். ஆகையால் என்னுடயை மருத்துவர்களின் அறிவுரைப்படி அவர்களின் மேற்பார்வையில் மூன்று நாட்கள் மருத்துவமனையில் கண்காணிப்பில் இருக்க நேரிட்டது. எனது உடல்நிலை கருதி தயாரிப்பாளர் கலாநிதி மாறன் மீதியுள்ள படப்பிடிப்பை ஒத்திவைத்தார். இதனால் பல பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு. பல கோடி ரூபாய் நஷ்டம். இவை அனைத்துக்கும் காரணம் என்னுடைய உடல்நிலை. இதை ஆண்டவன் எனக்கு கொடுத்த ஒரு எச்சரிக்கையாகத்தான் பார்க்கிறேன்.

நான் கட்சி ஆரம்பித்த பிறகு ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் மூலமாக மட்டும் பிரசாரம் செய்தால் மக்கள் மத்தியில் நான் நினைக்கும் அரசியல் எழுச்சியை உண்டாக்கி தேர்தலில் பெரிய வெற்றியை பெற முடியாது. இந்த யதார்த்தத்தை அரசியல் அனுபவம் வாய்ந்த யாரும் மறுக்கமாட்டார்கள். நான் மக்களை சந்தித்து கூட்டங்களை கூட்டி பிரசாரத்திற்கு சென்று ஆயிரக்கணக்கான ஏன், லட்சக்கணக்கான மக்களை சந்திக்க வேண்டியிருக்கும். 120 பேர் கொண்ட குழுவிலேயே கொரோனா பாதிப்பு ஏற்பட்டு நான் மூன்று நாட்கள் மருத்துவமனையில் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்க நேர்ந்தது. இப்போது இந்த கொரோனா உருமாறி புது வடிவம் பெற்று இரண்டாவது அலையாக வந்து கொண்டிருக்கிறது.
தடுப்பூசி வந்தால்கூட நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் (immuno suppressant) மருந்துகளை சாப்பிடும் நான், இந்த கொரோனா காலத்தில் மக்களை சந்தித்து, பிரசாரத்தின்போது என் உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டால் என்னை நம்பி என்கூட வந்து என்னுடன் அரசியல் பயணம் மேற்கொண்டவர்கள் பல சிக்கல்களையும் சங்கடங்களையும் எதிர்கொண்டு, மனரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பல துன்பங்களை சந்திக்க நேரிடும்.

என் உயிர் போனாலும் பரவாயில்லை, நான் கொடுத்த வாக்கை தவறமாட்டேன், நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி இப்போது அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால் நாலுபேர் நாலுவிதமா என்னை பற்றி பேசுவார்கள் என்பதற்காக என்னை நம்பி என் கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை. ஆகையால், நான் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்து வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். இதை அறிவிக்கும்போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டும்தான் தெரியும். இந்த முடிவு ரஜினி மக்கள் மன்றத்திற்கும், நான் கட்சி ஆரம்பிப்பேன் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ரசிகர்களுக்கும், மக்களுக்கும் ஏமாற்றத்தை அளிக்கும், என்னை மன்னியுங்கள். மக்கள் மன்றத்தினர் கடந்த மூன்று ஆண்டுகளாக என் சொல்லுக்கு கட்டுப்பட்டு ஒழுக்கத்துடனும், நேர்மையுடனும் கொரோனா காலத்திலும் தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்திருக்கின்றீர்கள், அது வீண் போகாது.

அந்த புண்ணியம் என்றும் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் காப்பாற்றும். கடந்த நவம்பர் 30ம் தேதி நான் உங்களை சந்தித்தபோது, நீங்கள் எல்லோரும் ஒருமனதாக ‘‘உங்கள் உடல் நலம்தான் எங்களுக்கு முக்கியம், நீங்கள் என்ன முடிவெடுத்தாலும் எங்களுக்கு சம்மதமே’’ என்று சொன்ன வார்த்தைகளை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன். நீங்கள் என்மேல் வைத்திருக்கும் அன்பிற்கும், பாசத்திற்கும் தலை வணங்குகிறேன். ரஜினி மக்கள் மன்றம் என்றும் போல செயல்படும். மூன்று ஆண்டுகளாக எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும் தொடர்ந்து என்னை ஆதரித்து, ‘முதலில் உங்க உடல் நலத்தை கவனியுங்க, அது தான் எங்களுக்கு முக்கியம்’ என்று அன்புடன் கூறிய மதிப்பிற்குரிய தமிழருவி மணியனுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் கேட்டு கொண்டதற்கிணங்க ஒரு பெரிய கட்சியில் பொறுப்பான பதவியிலிருந்து விலகி என் கூட வந்து பணியாற்ற சம்மதித்த அர்ஜூன மூர்த்திக்கும் நன்றி கூற நான் கடமைப்பட்டுள்ளேன். தேர்தல் அரசியலுக்கு வராமல் மக்களுக்கு என்னால் என்ன சேவை செய்ய முடியுமோ அதை நான் செய்வேன். நான் உண்மை பேச என்றுமே தயங்கியதில்லை. உண்மையையும், வெளிப்படை தன்மையையும் விரும்பும், என் நலத்தில் அக்கறையுள்ள, என் மேல் அன்பு கொண்ட என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகர்களுக்கும், தமிழக மக்களுக்கும் என்னுடைய இந்த முடிவை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். இதனால் கடந்த சில மாதங்களாக தமிழக அரசியலில் ரஜினி கட்சி குறித்து நிலவி வந்த பரபரப்புகள் அனைத்துக்கும் அவரே இந்த அறிக்கை மூலம் முற்றுப்புள்ளி வைத்து விட்டார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* ரஜினியும் ரசிகர்களுடன் ஆலோசனை நடத்தி வந்தார். நவம்பர் 30ம் தேதி, தான் கட்சி ஆரம்பிக்கப் போவதாகவும் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளராக பாஜவின் அறிவுசார் அமைப்பின் தலைவராக இருந்த அர்ஜூனமூர்த்தி இருப்பார் என்றும் அறிவித்தார்.
* அதிமுக மீதும் கூட்டணியில் உள்ள பாஜ மீதும் மக்களிடம் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதை சரிகட்ட, தமிழகத்தில் மக்களிடம் நல்ல அறிமுகம் உள்ளவரும், அரசியல் ஆசை இருப்பதாக கூறப்பட்டு வருபவருமான ரஜினியை அரசியலுக்கு கொண்டுவர வேண்டும் என்று பாஜ ஆதரவு தலைவர்கள் பலர் முயன்று வந்தனர்.
* கடந்த வாரம் ‘அண்ணாத்த’ பட சூட்டிங்கில் கலந்து கொண்டார். அப்போது, ரஜினிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஐதராபாத்தில் இருந்து ரஜினி சென்னை திரும்பினார்.
* இந்நிலையில், தான் அரசியலுக்கு வரவில்லை என பரபரப்பு அறிக்கையை ரஜினி வெளியிட்டார். இதனால் கடந்த சில மாதங்களாக தமிழக அரசியலில் ரஜினி கட்சி குறித்து நிலவி வந்த பரபரப்புகள் அனைத்துக்கும் அவரே முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.

Tags : Rajini , I will continue to serve the people did not come to politics: Rajini sensational statement
× RELATED அரசியல் குறித்த கேள்விகளுக்கெல்லாம்...