கண்டமங்கலம்: சின்னபாபுசமுத்திரம் கலைஞர் நகரில் பராமரிப்பு இல்லாததால் சுகாதார வளாகம் மற்றும் போர்வெல் ஆகியவை புதருக்குள் சிக்கிக் கிடக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியம் சின்னபாபு சமுத்திரம் கலைஞர் நகரில் அரசு சார்பில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சுகாதார வளாகம் கட்டப்பட்டது. அதனருகில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் ஒரு ஆழ்துளை போர்வெல்லும் அமைக்கப்பட்டது. ஆனால் சுகாதார வளாகம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படாததால் இப்பகுதியில் உள்ள பெண்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர்.
மேலும் ஆழ்துளை போர்வெல்லையும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வராததால் தற்போது போர்வெல் முழுவதும் செடி, கொடிகள் வளர்ந்து புதருக்குள் சிக்கியுள்ளது. ஆகவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக இதில் தலையிட்டு புதருக்குள் சிக்கிக் கிடக்கும் சுகாதார வளாகத்தையும், போர்வெல்லையும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.