×

கொரோனாவை விட மிக மோசமான ஆபத்துக்கு உலக நாடுகள் தயாராக வேண்டும் : உலக சுகாதார நிறுவனம்

ஜெனீவா : கொரோனாவை விட மிக மோசமான ஆபத்துக்கு உலக நாடுகள் தயாராக வேண்டும் என்று உலகச் சுகாதார நிறுவன அவசரகாலத் திட்டத் தலைவர் டாக்டர் மைக் ரயன்(Mike Ryan) தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் இங்கிலாந்துக்கு விமானம், ரயில் போக்குவரத்துகளை பல நாடுகளும் துண்டித்து உள்ளன.
இந்த வைரசின் பாதிப்பு எப்படி இருக்கும் என்பதை பற்றி இன்னும் உறுதியான முடிவுக்கு வர முடியவில்லை. அதன் தன்மைகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் உலகச் சுகாதார நிறுவன அவசரகாலத் திட்டத் தலைவர் டாக்டர் மைக் ரயன் நேற்று நிரூபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், உருமாறியுள்ள கிருமியைக் கையாள உலக நாடுகள் இன்னும் தயார் நிலையில் இருக்கவேண்டும் என்று எச்சரித்துள்ளார்.மேலும் புதிய கிருமி குறித்த ஆய்வைத் துரிதப்படுத்துமாறு உலக அளவில் ஆராய்ச்சியாளர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட அவர், பிரிட்டனிலும் தென் ஆப்பிரிக்காவிலும் அடையாளம் காணப்பட்ட உருமாறிய கிருமி, முந்தைய கொரோனா கிருமியைவிட இரண்டு மடங்கு தொற்றக்கூடியதாக இருக்கலாம் என பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்ததாகவும் அதன் காரணமாகவே, புதிய பயணக் கட்டுப்பாடுகள் உலகெங்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன என்பதையும் கூறினார்.மேலும், இந்த தொற்றுநோய் காலம் மிகவும் கொடுமையானது, உலகம் முழுவதும் மிக விரைவாக கொரோனா தொற்று நோய் பரவியுள்ளது, இந்த தொற்று நோய் பூமியின் ஒவ்வொரு மூலையையும் பாதித்துள்ளது. ஆனால் இது தான் மோசமானது என்று கூறிவிட முடியாது.எதிர்காலத்தில் கொரோனாவை விட மிக மோசமான ஆபத்துக்கு நாம் தயாராக வேண்டும், என்றார்.


Tags : nations ,world ,World Health Organization , Corona, Risk, World Nations, World Health Organization
× RELATED சில்லி பாயின்ட்…