ராஜபாளையம்: தமிழகத்தில் மூன்றாவது அணி எடுபடாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறினார். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவில் முத்தரசன் கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘நியாயமான கோரிக்கைகளுக்கு டெல்லியில் விவசாயிகள் போராடுகின்றனர். அதனைப் பொதுமக்களும் ஆதரிக்கின்றனர். எனவே, விவசாயிகளுக்கு எதிராக இயற்றப்பட்ட வேளாண் சட்டத்தை நீக்க வேண்டும். தமிழக அரசு இந்த சட்டத்தை ஆதரிக்கிறது.
தமிழக முதல்வர் விவசாயி என்பதை மறந்தும் இந்த வேளாண் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இந்த சட்டத்தை திரும்பப் பெறும் வரை நாடு முழுவதும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் தொடர்ந்து போராட்டம் நடைபெறும். வரும் சட்டமன்ற தேர்தலில் 3வது அணிக்கு வாய்ப்பில்லை. மூன்றாவது அணி எடுபடாது’’ என்றார்.