×

குலசேகரன்பட்டினம் தருவைகுளம் நிரம்பி மறுகால் பாய்கிறது

உடன்குடி: திருச்செந்தூர் பகுதியில் உள்ள எல்லப்பநாயக்கன்குளம் நிரம்பி மறுகால் பாய்ந்து உடன்குடி அனல்மின்நிலையத்தில் பின்புறமுள்ள நீர்வழித்தடம் வழியாக குலசேகரன்பட்டினம் தருவைகுளத்திற்கு வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பெய்த மழைகாரணமாகவும், பாசனத்திற்காகவும் திறந்து விடப்பட்ட தண்ணீர் மூலம் குளங்கள் நிரம்பி வருகிறது. இதன் ஒருபகுதியாக குலசேகரன்பட்டினம் தருவைகுளம் நிரம்பி மறுகால் பாய்ந்து வருவதால் நிலத்தடி நீர் மட்டம் உயர வாய்ப்புள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் தற்போது எல்லப்பநாயக்கன்குளத்திலிருந்து தருவைகுளம் வரும் நீர்வழித்தடங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டதின் காரணமாக ஏராளமான தண்ணீர் வீணாக காடுகளில் பாய்ந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் வரும் காலங்களில் நீர்வழித்தடங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kulasekaranpattinam Daruvaikulam , Kulasekaranpattinam
× RELATED குலசேகரன்பட்டினம் தருவைகுளம் நிரம்பி மறுகால் பாய்கிறது