×

நடுங்க வைக்கிறது உறைபனி சீசன்: கொடைக்கானல் மக்கள் வீடுகளில் முடக்கம்

கொடைக்கானல்: கொடைக்கானலில் உறைபனி சீசன் தொடங்கியுள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல், மலைகளின் இளவரசி என அழைக்கப்படுகிறது. கிறிஸ்துமஸ் தொடர் விடுமுறையையொட்டி, பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் இங்கு வந்து குவிந்துள்ளனர்.

ஆண்டுதோறும் டிசம்பர் முதல் பிப்ரவரி வரை நகரில் குளிரின் தாக்கம் சற்று அதிகமாக இருக்கும். ஆனால், இந்தாண்டு குளிரின் தாக்கம் கால தாமதமாக துவங்கியுள்ளது. இந்தாண்டு பருவமழை அதிகமாக பெய்ததால், நட்சத்திர ஏரி முழு கொள்ளளவை எட்டியது. பனிப்பொழிவும் அதிகமாக உள்ளது. குறிப்பாக கொடைக்கானல் நட்சத்திர ஏரி, பிரையண்ட் பூங்கா, கீழ்பூமி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உறைபனி அதிகமாக கொட்ட தொடங்கியுள்ளது. கொடைக்கானல் ஏரி மற்றும் மலைப்பகுதிகளில் வெண்ணிற கம்பளம் விரித்ததை போல் உறைபனி படர்ந்துள்ளது.

உறைபனி அதிகரிப்பால், ஏரியில் நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் வெயில் வந்த பிறகே வருகின்றனர். சிறு வியாபாரிகள் கடைகளை தாமதமாக திறக்கின்றனர். இந்த ஆண்டு உறைபனி தாமதமாக துவங்கினாலும், கடுமையாக இருக்கிறது.
பனிப்போர்வை போர்த்திய கொடைக்கானலை சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர். ஆனால், கடுங்குளிரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு முடங்கியுள்ளது. உள்ளூர் மக்கள் கடும் பனியால் காலையில் தாமதமாக பணிகளை தொடங்கி, மாலையில் விரைவாக முடித்து விடுகின்றனர். முதியவர்கள் குளிர் தாங்க முடியாமல் வீடுகளுக்குள் முடங்கி விட்டனர்.

பகலிலும் கம்பளி, ஜெர்கின், ஸ்வெட்டர், மப்ளர், கையுறைகள் அணிந்து செல்கின்றனர். இரவு நேரங்களில் வீடுகளில் ஹீட்டர் உள்ளிட்ட சாதனங்களை பயன்படுத்தி, பனியின் தாக்கத்தை சமாளிக்கின்றனர். அதிக பனிப்பொழிவால் கொடைக்கானலில் பட்டாணி, பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு உள்ளிட்ட விளைபொருட்கள், மேல் மலைப்பகுதிகளில் வெள்ளைப்பூண்டு விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

Tags : homes ,Kodaikanal , Kodaikanal
× RELATED கொடைக்கானலில் வறண்ட முகம் காட்டும்...