பெங்களூரு: பிரிட்டனில் இருந்து பெங்களூரு விமான நிலையம் வழியாக பயணம் செய்தவர்களில் 204 பேரின் செல்போன் சுவிட்ச் ஆப் ஆகியுள்ளதால், அவர்களை கண்டுபிடிக்க மாநகராட்சி நிர்வாக அதிகாரிகள் நகர போலீசாரின் உதவியை நாடியுள்ளனர். கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு பெரும் அளவு மக்களின் மனநிலையை பாதித்தது. குவாரன்டைன், ஊரடங்கு, வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடப்பது, வியாபார நஷ்டம், வேலை வாய்ப்பின்மை என்று பல்வேறு நெருக்கடிகளை சந்தித்தனர். கடந்த இரண்டு மாதங்களாகத்தான் மக்கள் நிம்மதியாக வாழ்க்கை நடத்தினர். இந்நிலையில் இங்கிலாந்து, பிரிட்டனில் இருந்து வந்த கொரோனா, தற்போது மக்கள் மத்தியில் மேலும் பீதியை ஏற்படுத்தும் வண்ணம் அமைந்துள்ளது.
இதனால் அனைவரும் வடிவேல் பாணியில் மீண்டும் முதலில் இருந்தா’’ என்று கதற தொடங்கிவிட்டனர். ஏனென்றால் கொரோனா முதல் அலை பரவியபோது, கொலையாளிகளை பிடிப்பதுபோன்று ஒவ்வொருவரையும் சுகாதாரத்துறை அதிகாரிகள், போலீசார் மடக்கி பிடித்தனர்.
இதனால் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது. வெளி நாடுகளில், வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள், வேலை பார்க்கும் இடம் மற்றும் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். இந்நிலையில் மத்திய, மாநில அரசுகள் பதட்டம் வேண்டாம் என்று கேட்டு கொண்டாலும், புதிய வைரஸ் அதிகளவு தாக்கத்தை ஏற்படுத்திவிடக்கூடாது என்ற அச்சம் ஏற்பட்டு வருகிறது. ஏனென்றால் கடந்த முறை சீனாவில் இருந்து பரவிய கொரோனா, ஒன்றும் இல்லையென்று கூறப்பட்டு, பலரது உயிர்களை காவு வாங்கிவிட்டது. இதனால் மீண்டும் அதேபோன்ற ஒரு சூழ்நிலை உருவாகி விடக்கூடாது என்பதற்காக, மாநகராட்சி நிர்வாகம், ஒவ்வொரு பிரிட்டன் பயணிகளையும் அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
இதுவரை மாநகராட்சி நிர்வாகத்திற்கு வந்த தகவல்படி பிரிட்டன், இங்கிலாந்தில் இருந்து 1,686 பேர் பெங்களூரு விமான நிலையம் வாயிலாக வந்துள்ளனர். இதில் 66 பேர் வெவ்வேறு மாநிலத்திற்கு சென்றுவிட்டனர். 411 பேருக்கு கொரேனா பரிசோதனை செய்யப்பட்டதில், 15 பேருக்கு கொரோனா உறுதியானது. 773 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகிவிட்டது. இன்னும் 349 பேரின் கொரோனா பரிசோதனை அறிக்கை வரவேண்டியுள்ளது.
இது தவிர 204 பேரின் முகவரி, எங்கிருந்து எங்கு சென்றனர் என்ற விவரங்கள் கிடைக்கவில்லை. செல்போன் நம்பர் மட்டும் கிடைத்தது. ஆனால் அவையும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இவர்கள் வாயிலாக பிரிட்டன் கொரோனா பரவிவிடக்கூடாது என்பதற்காக சி.டி.ஆர் லோக்கேசனை வைத்து, தேடி வருகின்றனர். ஆனால் மாநகராட்சி அதிகாரிகளால் அவர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க முயவில்லை. இதனால் நகர போலீசாரின் உதவி கேட்டுள்ளனர். அதாவது சுவிட்ச் ஆப் செய்துவிட்டு, தலைமறைவானவர்களை அடையாளம் கண்டுபிடித்து கொடுக்கும்படி கோரியுள்ளனர். இதனால் போலீசார் அவர்களை தேடி கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு குற்றவாளியை போன்று வெளி மாநிலத்தவர்களை தேடி அலைவதால், மீண்டும் மக்கள் மத்தியில் பிரிட்டன் கொரோனா குறித்து அதிகளவு பீதி ஏற்பட தொடங்கியுள்ளது.