புதுடெல்லி: மளிகைக் கடையில் 200 ரூபாய்க்கு சில்லறை கேட்கும் சாக்கில் 9,000 பறித்துச் சென்ற திருடன் சிக்கினான். துக்ளகாபாத் கிராமத்தில் மளிகைக் கடை வைத்திருப்பவர் ஷம்பு குமார். சனிக்கிழமை பிற்பகல் 3.30 மணி அளவில், கல்லாவில் குமார் அமர்திருந்தார். அப்போது அங்கு வந்த இரண்டு பேர், 200க்கு சில்லறை கேட்டனர். இரண்டு நூறு ரூபாய் தாள்களை மாற்றாக குமார் கொடுத்த போது, அதனை அவர்கள் பெற்றுக் கொண்டனர். பின், இருவரில் ஒருவன், கூர்மையான ஆயுதத்தை குமார் கழுத்தில் வைத்து மிரட்டினான். மற்றொருவன் கல்லாவில் இருந்த ₹9,000 ரொக்கத்தை பறித்தான். பிறகு இரண்டு பேரும் தப்பித்தனர். குமார் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரித்த போலீசாருக்கு, பணம் பறிப்பில் ஈடுபட்டது ஜெய்த்பூரின் சவுரப் விகாரைச் சேர்ந்த 23 வயது விஷால், ராக்கி என உறுதியானது. விஷாலையும் அவனது கூட்டாளியையும் வலைவீசி போலீசார் தேடினர். அதில் லவ குசா சவுக் அருகே வைத்து விஷால் கைது செய்யப்பட்டான். அவனிடம் இருந்து ₹4,100 பறிமுதலானது. ராக்கியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.