நாகர்கோவில்: குமரி மாவட்டம் பளுகல் அருகே வேறு பெண்ணை திருமணம் செய்ய திட்டமிட்டு இருந்த வாலிபர் மீது, அவரது காதலி ஆசிட் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குமரி மாவட்டம் பளுகல் பகுதியை சேர்ந்தவர் ஷிபு (39). திருமணமாகாதவர். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த 40 வயது பெண்ணுக்கும், பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் ஷிபுவுக்கு, வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடுகள் நடந்தன. இது பற்றி அறிந்ததும், ஆத்திரம் அடைந்த காதலி, வேறு பெண்ணை திருமணம் செய்தால் என்னை மறந்து விடுவாய். நீ வேறு யாரையும் திருமணம் செய்யக்கூடாது. உன்னை எந்த பெண் திருமணம் செய்கிறாள் என்று பார்க்கிறேன் என கூறி ஷிபுவிடம் தகராறு செய்துள்ளார்.
கடந்த 26ம்தேதி அவரை சமாதானம் செய்வதற்காக ஷிபு சென்றுள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த காதலி, ரப்பர் ஷீட்டை உறைய வைக்கும் ஆசிட்டை எடுத்து ஷிபுவின் முகத்தில் ஊற்றினார். வேதனை தாங்க முடியாமல் அலறிய ஷிபு, அங்கிருந்து தப்பி தனது வீட்டுக்கு ஓடி வந்தார். அதன் பின்னரும் விடாமல் துரத்தி உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கினார். தடுக்க வந்த ஷிபுவின் தாயாரும் தாக்கப்பட்டார். மேலும் ஷிபுவின் சகோதரர் பைக்கையும் அடித்து நொறுக்கினார்.
இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த ஷிபு மற்றும் அவரது தாயார் மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர் ஷிபு, மேல் சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆசிட் வீசியதில் அவரது கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஷிபு பளுகல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி காதலி, அவரது 19 வயது மகன் உள்பட 4 பேர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.