×

முன்விரோத தகராறில் வாலிபர் வெட்டி கொலை: ஆட்டோ கும்பலுக்கு வலை

பெரம்பூர்: புளியந்தோப்பு அருகே முன் விரோத தகராறில் வாலிபர் வெட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கொருக்குப்பேட்டை அம்பேத்கர் நகர் 4வது தெருவை சேர்ந்தவர் சிலம்பரசன்(35). இவர் புளியந்தோப்பில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு நேற்று மதியம் வந்து தனது மனைவி பவானி மற்றும் மகன்கள் ஷாம்(15), ஆகாஷ்(12) ஆகியோரை பார்த்துவிட்டு திரும்பி புளியந்தோப்பு டிம்ளர்ஸ் சாலை வழியாக சென்றார். அப்போது ஆட்டோவில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் சிலம்பரசனை சரமாரியாக வெட்டியது. இதில் சிலம்பரசன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பேசின்பிரிட்ஜ் போலீசார் சிலம்பரசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி விஜயன் என்பவர் கடந்த செப்டம்பர் மாதம் உயிரிழந்தார். இவரது மகனான பாலு (எ) பாலசுப்பிரமணியம் தந்தையின் மறைவிற்கு பிறகு கொருக்குப்பேட்டை பகுதியில் தாதாவாக வலம் வந்துள்ளார். இதனால் அதே பகுதியை சேர்ந்த சிலம்பரசனின் தம்பி அன்பரசனுக்கும் பாலுவுக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் 4ம் தேதி அன்பரசன், இளவரசன், குறளரசன், தென்னரசன் உள்ளிட்ட ஏழு பேர் சேர்ந்து பாலுவை வெட்டி கொலை செய்தனர். தற்போது இந்த வழக்கில் அன்பரசன் உள்ளிட்ட 7 பேரும் புழல் சிறையில் உள்ளனர். இந்த கொலைக்கு பழி வாங்குவதற்காக பாலுவின் உறவினர்களான யுவராஜ் மற்றும் அசோக் உள்ளிட்ட மூன்று பேர் சேர்ந்து அன்பரசனின் அண்ணன் சிலம்பரசனை நேற்று கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடியவர்களை வலைவீசி தேடிவருகின்றனர். கொலை நடந்த இடத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் பேசின்பிரிட்ஜ் காவல் நிலையம் உள்ளது.  பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 


Tags : death ,auto gang , Perambur, murder
× RELATED பாட்னா ரயில் நிலையம் அருகே ஓட்டலில்...