திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் கேட்பாரற்று கிடக்கும் முருகன் சிலையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் ஆன்மிக திருத்தலங்களில் புகழ் பெற்றதாகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோயில் கடற்கரையில் கடந்த மாதம் சூரபதுமனை சம்ஹாரம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெற்றது. இந்நிலையில் கோயில் கடற்கரையில் கடந்த சில வாரங்களாக சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய முருகனின் கற்சிலை ஒன்று கடற்கரை மணலில் பாதி புதையுண்ட நிலையில் கிடக்கின்றது.
தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த கடற்கரையில் நீராடி முருகனை வழிபட்டு செல்கின்றனர். ஆனால் இந்த மணல் பகுதியில் திடீரென காணப்படும் முருகனின் கற்சிலையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அனைவரும் போற்றி வழிபடும் முருகக்கடவுளின் சிலை எந்த வழிபாடும் இன்றி கடற்கரையில் தூய்மையற்ற சூழலில் இருப்பது பக்தர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே திருக்கோயில் நிர்வாகம் விரைவாக நடவடிக்கை எடுத்து இந்த முருகன் சிலையை அறநிலையத்துறையிடம் ஒப்படைத்து ஆகம விதிப்படி வழிபாடுகள் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். இல்லையென்றால் தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.