பழநி: பழநி கோயிலில் 8 மாதத்திற்கு பின் இன்று ரோப்கார் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாத இறுதியில் ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டது. பக்தர்கள் தரிசனத்திற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். மாற்றுத்திறனாளிகள், முதியோர் நலனை கருத்தில் கொண்டு மலைக்கோயிலுக்கு செல்ல கடந்த 1ம் தேதி முதல் வின்ச் இயக்கப்பட்டு வருகிறது.
இதுபோன்று ரோப்கார் சேவையையும் துவக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து இன்று காலை ரோப்கார் சேவை பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. முன்னதாக ரோப்காருக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதில் கோயில் செயல் அலுவலர் கிராந்திகுமார் பாடி, துணை ஆணையர் செந்தில்குமார், செயற்பொறியாளர் வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே ரோப்கார் மூலம் மலைக்கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுவர் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 8 மாதத்திற்கு பின் ரோப்கார் சேவை துவக்கப்பட்டுள்ளது பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.