தர்மபுரி: கர்நாடக மாநிலம் மைசூர் குவம்பூநகர் பகுதியை சேர்ந்தவர் பரத் (33). இவர், டிப்ளமோ படித்து விட்டு கேபிள் டிவி ஆப்ரேட்டராக வேலை பார்த்து வந்தார். கொரோனா காலத்தின்போது வீட்டில் இருந்த அவர், மக்களுக்கு கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்தார்.
இதையொட்டி தனக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க, ஊரிலேயே நடைபயிற்சி மேற்கொண்டார். இதில் அவருக்கு எதிர்ப்பு சக்தி அதிகரித்ததால், அதை மக்களிடம் எடுத்துக்கூறி கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொள்ள முடிவு செய்தார்.
கடந்த 11ம் தேதி கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து நடைபயணம் மேற்கொண்ட அவர், திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல், சேலம் வழியாக நேற்றிரவு தர்மபுரி வந்தார். அவரை, தர்மபுரி மிட்டவுன் ரோட்டரி சார்பில் துணை ஆளுநர் லட்சுமணன், தலைவர் வெங்கடேஷ் வரவேற்றனர். பின்னர், தர்மபுரி பாரதிபுரம் மழலையர் பள்ளியில் தங்க வைக்கப்பட்ட அவர், அங்கு மரக்கன்றை நட்டு வைத்தார். தொடர்ந்து ேநற்று காலை 5 மணியளவில் மீண்டும் நடைபயணத்தை தொடங்கினார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘100 ஆண்டுகளுக்கு முன்பு எங்கு சென்றாலும், மக்கள் நடந்து செல்வதுதான் வழக்கம். தற்போது, வாகனத்தில் செல்வதால் நடப்பதை மறந்து விட்டோம். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து எளிதில் நோய் தொற்று ஏற்படுகிறது. முறையாக நடைபயிற்சி மேற்கொண்டால் கொரோனாவில் இருந்து மீள முடியும்,’ என்றார்.