×

சென்னையில் அதிமுக பிரசார பொதுக்கூட்டம்; கூட்டணி தலைவர்கள் புறக்கணிப்பு: முதல் நாளிலேயே பிரச்னை வெடித்தது

சென்னை: சென்னையில் நேற்று நடந்த அதிமுக தேர்தல் பிரசார தொடக்க பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மட்டும் கலந்து கொண்டனர். முதல் நாள் பிரசார கூட்டத்திலேயே கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்காததால் கூட்டணி கட்சிகளுக்குள் பெரும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டமன்ற ெபாதுத் தேர்தல் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ளது.

தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக தொண்டர்களிடம் பேசி வருகிறார். அப்போது தேர்தல் தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறார். வருகிற ஜனவரி முதல் வாரத்தில் இருந்து அவர் நேரடியாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் சொந்த தொகுதியான எடப்பாடியில் கடந்த வாரம் பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து அவர் தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில் அதிமுக தேர்தல் பிரசார தொடக்க பொதுக்கூட்டம் 27ம் தேதி(நேற்று) நடைபெறும் என்று அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டது.

முதலில் இந்த பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சிகளான பாமக, பாஜ, தேமுதிக உள்ளிட்ட கட்சி தலைவர்களையும் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் நடந்து வந்தது. அதே நேரத்தில் கூட்டணி தொடர்பாக அதிமுகவில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் பிரச்னைகள் இதுவரை களையப்படவில்லை. அதாவது கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜ, அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடியை ஏற்றுக் கொள்ளவில்லை. தமிழக பாஜ தலைவர் எல்.முருகன் உள்பட அனைத்து தலைவர்களும் அதிமுக வேண்டுமென்றால், முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவிக்கலாம். எங்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. ேதசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை டெல்லி பாஜ மேலிடம் தான் அறிவிக்கும்.

அதிமுகவால் தன்னிச்சையாக அறிவிக்க முடியாது என்றும் கூறி வருகின்றனர். இன்று வரை அவர்கள் எந்த இடத்திலும் எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக ஏற்று கொள்ளவில்லை.  அது மட்டுமல்லாமல் அதிமுக ஊழல் குறித்தும் வெளிப்படையாக பேச தொடங்கியுள்ளனர். குறிப்பாக பாஜ துணை தலைவர் பொங்கல் பண்டிகைக்காக ரூ.2500 வழங்குவது குறித்து விமர்சித்து இருந்தார். இதனால், அதிமுக கூட்டணியில் உள்ள தலைவர்களிடம் தொடர்ந்து ஒரு இறுக்கமான சூழ்நிலை இருந்து வருகிறது. அதற்கு அதிமுக அமைச்சர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர். முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான்.

அவர் தலைமையில் தான் சட்டப்பேரவை தேர்தலை சந்திப்போம். இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.பாஜவின் கருத்ைத ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றும் கூறி வருகின்றனர்.  இந்த பிரச்னையால் பாஜவுக்கும் அதிமுகவுக்கும் இடையே மோதல் போக்கு தொடர்ந்து நீடித்து வருகிறது. அதே நேரத்தில் அதிக தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்றும் பாஜ மேலிடம் தரப்பில் இருந்து அதிமுகவிற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. கூட்டணியில் உள்ள பாமகவும் தங்களுக்கு துணை முதல்வர் பதவி தர வேண்டும். அதிக தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கியுள்ளது. இந்த விஷயத்தில் கூட்டணி கட்சியினர் பிடிவாதமாக இருக்கிறார்கள்.

தேமுதிகவும், ஜெயலலிதா இருந்தபோது எங்களுக்கு 41 தொகுதிகளை ஒதுக்கினார். அதை விட கூடுதலான தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று டிமாண்ட் செய்து வருகின்றனர். எங்கள் நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் தனித்து போட்டியிடவும் தயங்க மாட்டோம் என்றும் கூறி வருகின்றனர். கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை சீட் என்பது உறுதி செய்யப்படாத நிலையிலும், கூட்டணி கட்சிகள் பிடிவாதமாக இருந்து வரும் இந்த பரபரப்பான சூழ்நிலையில், அதிமுகவின் தேர்தல் பிரசார தொடக்க பொதுக்கூட்டம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நேற்று காலை நடந்தது. கூட்டத்துக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமை தாங்கினர்.

அவைத்தலைவர் இ.மதுசூதனன், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம், நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர். ஆனால் பாஜ, பாமக, தேமுதிக உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. அதேபோல் தமாகாவில் இருந்தும் யாரும் பங்கேற்கவில்லை. தொகுதி பிரச்னை காரணமாக தான் கூட்டணி கட்சி தலைவர்கள் யாரும் பங்கேற்கவில்லை. இதனால், தான் அவர்கள் இந்த கூட்டத்தை புறக்கணித்ததாக கூறப்படுகிறது. கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்காதது அதிமுக தொண்டர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதல் நாள் பிரசார கூட்டத்திலேயே கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்காததால் பிரச்னை வெடித்துள்ளது.

இந்த நிலையில் பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி, ‘‘அதிமுக பல்வேறு சோதனைகளை சந்தித்திருக்கிறது, இன்றைக்கு ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சில புல்லுருவிகள், துரோகிகள் இயக்கத்தை உடைக்க முயற்சி செய்தார்கள், அதையும் இங்கே இருக்கின்ற நிர்வாகிகள், தொண்டர்கள் ஒத்துழைப்போடு தவிடு பொடியாக்கினோம். இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி இருக்கலாம், ஓபிஎஸ் இருக்கலாம், நாளைக்கு நீங்கள் முதல்வராக வரலாம், இங்கே என் முன்னால் அமர்ந்திருக்கின்றவர்கள், இன்னமும் மூலை முடுக்கில் உள்ள எத்தனையோ தொண்டர்கள், நிர்வாகிகள் எம்எல்ஏ, எம்பி ஆகலாம்.

அமைச்சர் ஆகலாம், ஏன், முதல்வராககூட ஆவதற்கு வாய்ப்புள்ள ஒரே இயக்கம் அதிமுக இயக்கம். அதிமுக மிகப்பெரிய வெற்றியைப் பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்து ஜெயலலிதா அரசு தொடர பாடுபடுவோம்” என்றார். துணை முதல்வர் ஓ.பி.எஸ்.பேசுகையில்,‘‘மக்களிடம் நமக்கு எந்த கெட்ட பெயரும் இல்லை. நல்ல பெயரை வாக்குகளாக கொண்டு போய் சேர்க்கின்ற கடமை அதிமுகவின் ஒவ்வொரு தொண்டனுக்கும் உண்டு. அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்” என்றார். துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி ேபசுகையில், ‘‘2021 சட்டமன்ற தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 50 ஆண்டு காலம் வழி நடத்திய தலைவர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இல்லை. இவர்களை எதிர்த்து நின்று அரசியல் செய்த கருணாநிதியும் இன்று இல்லை.

அரசியல் ரீதியாக எதிரும், புதிருமாக போர்களத்தில் நின்ற தலைவர்கள் இந்த தேர்தல் களத்தில் இல்லாததால், எப்படியாவது இடையில் புகுந்து வெற்றி பெற்றுவிடலாம் என்று பலர் கணக்கு போடுகிறார்கள். கடந்த 50 ஆண்டாக தமிழகத்தில் எந்த தேசிய கட்சியையும் உள்ளே நுழையவிடாமல் ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. தேசிய கட்சிகளுக்கு நான் ஒன்று சொல்லிக் கொள்கிறேன். கூட்டணியில் எந்த தேசிய கட்சிகளும், மாநில கட்சிகள் வந்தாலும் அதிமுக தலைமையில் தான் ஆட்சி. இதில் கூட்டணி ஆட்சி என்பதற்கு  இடமே இல்லை. தேவையும் இல்லை.

எனவே கூட்டணி ஆட்சி அமைப்போம், அமைச்சரவை அமைப்போம் என்ற  எண்ணத்தோடு கூட்டணிக்கு வரும் அரசியல் கட்சிகள் சிந்திக்க வேண்டாம்” என்றார். பாஜக தலைவர்கள் பலர் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் நடைபெறும் என்றும் கூறி வந்தனர். அண்மையில் பாஜ துணை தலைவர் அண்ணாமலை எச்.ராஜாவை அமைச்சராக்குவோம் என்று பேசி அதிர்ச்சியை கொடுத்தார். பாமக துணை முதல்வர் பதவி தர வேண்டும் என்றும் கூறி வருகிறது. இந்த நிலையில் கே.பி.முனுசாமி மறைமுகமாக பாஜகவையும், பாமகவையும் தாக்கியுள்ளது கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.



* அதிமுக தேர்தல் பிரசார தொடக்க பொதுக்கூட்டம் கூட்டத்தில் கூட்டணி கட்சிகளான பாமக, பாஜ, தேமுதிக உள்ளிட்ட கட்சி தலைவர்கள் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் நடந்து வந்தது.
* கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜ, அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடியை ஏற்றுக் கொள்ளவில்லை.  
* அதிக தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று பாஜ மேலிடம் தரப்பில் இருந்து அதிமுகவுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.
* பாமகவும் தங்களுக்கு துணை முதல்வர் பதவி தர வேண்டும். அதிக தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கியுள்ளது.
* தேமுதிகவும் கூடுதல் தொகுதி கேட்கிறது. இல்லாவிட்டால் தனித்து போட்டி என்றும் கூறிவருகிறது.
* இப் பின்னணியில் அதிமுகவின் முதல் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதில் பாஜ, பாமக, தேமுதிக உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. தமாகாவில் இருந்தும் யாரும் பங்கேற்கவில்லை.
* தொகுதி பங்கீடு பிரச்னையால் கூட்டணி தலைவர்கள் யாரும் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.
* அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி ேபசுகையில், ‘கூட்டணியில் எந்த தேசிய கட்சி, மாநில கட்சிகள் வந்தாலும் அதிமுக தலைமையில் தான் ஆட்சி. இதில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கு இடமே இல்லை’ என கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tags : campaign rally ,AIADMK ,leaders ,Chennai ,Coalition , AIADMK campaign rally in Chennai; Coalition leaders boycott: The problem erupted on the first day
× RELATED தேர்தல் பத்திர ஊழல், பி.எம்.கேர்ஸ் நிதி...