திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியன்று பக்தர்கள் கிரிவலம் வருவது வழக்கம். ஆனால், கொரோனா காரணமாக, கடந்த மார்ச் மாதம் முதல் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவில் அளிக்கப்பட்ட தளர்வின் காரணமாக, கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும் நிலையிலும், கிரிவலத்துக்கான தடை மட்டும் தொடர்ந்து நீடிக்கிறது.
இந்நிலையில், மார்கழி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் வரும் 29ம்தேதி காலை 8.01 மணிக்கு தொடங்கி, 30ம் தேதி காலை 8.57 மணிக்கு நிறைவடைகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தொடர்ந்து 10வது மாதமாக மார்கழி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்படுவதாக கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். கொரோனா காரணமாக தடை விதிக்கப்படுவதால், பக்தர்கள் உரிய ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால் மாவட்ட நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு பக்தர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர். தமிழக அரசு தலையிட்டு பக்தர்கள் கிரிவலம் செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.