ஐதராபாத்: ஐதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ரஜினி இன்று மாலை டிஸ்சார்ஜ் என சத்தியநாராயணன் தகவல் தெரிவித்துள்ளார். ரஜினியின் உடல்நிலை சீராக உள்ளது; எந்த பாதிப்பும் இல்லை எனவும் அவரது சகோதரர் தகவல் தெரிவித்துள்ளார். கடந்த 10 நாட்களாக ஐதராபாத்தில் நடந்த படப்பிடிப்பில் கலந்துகொண்ட ரஜினிகாந்திற்கு கடந்த 22ம் தேதி பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டது. அன்று முதல் அவர் தனிமையில் இருந்து வந்தார். யாரையும் சந்திக்கவில்லை. தொடர்ந்து அவரது உடல்நிலை தீவிரமாக கண்காணிக்கப்பட்டது. இந்தநிலையில் ரஜினிகாந்துக்கு ரத்த அழுத்தம் சீராக இல்லாமல், கடுமையாக ஏறி இறங்கி வந்ததால், மேற்கொண்டு மருத்துவ பரிசோதனைகள் நடத்துவதற்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து நடிகர் ரஜினிகாந்தை எப்போது டிஸ்சார்ஜ் செய்வது என்பது பற்றி இன்று மாலை முடிவெடுக்கப்படும் என்று அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அப்போலோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடிகர் ரஜினியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் உள்ளது. மருத்துவப் பரிசோதனைகளில் கவலைப்படும் வகையில் எதுவும் கண்டறியப்படவில்லை.நடிகர் ரஜினியின் ரத்த அழுத்தம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவா் முழுமையான ஓய்வில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளாா். பாா்வையாளா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அவருக்கு இதுவரை எடுக்கப்பட்டுள்ள முழுமையான ஆய்வுகளின் முடிவுகள், ரத்த அழுத்த நிலை ஆகியவற்றின் அடிப்படையிலேயே, அவரை மருத்துவமனையிலிருந்து எப்போது அனுப்புவது என்பது முடிவு செய்யப்படும் என்று மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரஜினிகாந்த் ஞாயிற்றுக்கிழமை மாலை வீடு திரும்புவார் என அவரது சகோதரர் சத்தியநாராயணன் தெரிவித்துள்ளார். மேலும் ரஜினியின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், அவருக்கு எந்த பாதிப்புமில்லை என்று சத்தியநாராயணன் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.