சென்னை: அமமுக அமைப்பு செயலாளர் பொறுப்பில் இருந்து நடிகர் செந்திலை நீக்கி கட்சி பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் அறிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு கட்சியில் பல்வேறு புதிய பொறுப்புகளை டிடிவி.தினகரன் அறிவித்து வருகிறார். இதேபோல், மாவட்டங்களில் கட்சி பணிகளை எளிதாக மேற்கொள்வதற்காக தனித்தனியாக பிரித்தும் அதற்கென புதிய நிர்வாகிகளையும் நியமித்து வருகிறார். மேலும், தேர்தல் பிரச்சார பயணத்தை தொடங்கவும் டிடிவி.தினகரன் திட்டமிட்டுள்ளார்.
இந்தநிலையில், அமமுக அமைப்பு செயலாளர் பொறுப்பில் இருந்து நடிகர் செந்திலை நேற்று முன்தினம் திடீரென நீக்கி டிடிவி.தினகரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நடிகர் செந்தில் கடந்த 2019ம் ஆண்டு அமமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். இதையடுத்து, அவருக்கு கட்சி அமைப்பு செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. நீண்ட நாட்களாக கட்சி ரீதியான நடவடிக்கைகளில் அவர் ஈடுபாடு காட்டாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனாலேயே அவரின் கட்சி பதவி பறிக்கப்பட்டதாக அமமுக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.