சென்னை: சென்னை பெரியமேட்டில் உள்ள ஒரு லாட்ஜில், விஷம் குடித்து ஆயுதப்படை காவலர் தற்கொலை செய்து கொண்டார். தற்ெகாலைக்கு முன்பாக அவர் எழுதியிருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டம், பழைய வண்டி பாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ் (26). இவர் கடந்த 2013ம் ஆண்டு முதல், சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படையில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 16ம் தேதியில் இருந்து சுரேஷ், பணிக்கு வரவில்லை. இந்நிலையில் சக காவலர்கள் பணிக்கு வராதது குறித்து சுரேஷிடம் கேட்டனர்.
சொந்த வேலை இருப்பதால் 19ம் தேதி முதல் பெரியமேடு காவல் நிலையம் அருகே உள்ள லாட்ஜில் தங்கி இருப்பதாக கூறி உள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சுரேஷ் தங்கி இருந்த அறை நீண்ட நேரமாக திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த லாட்ஜ் ஊழியர்கள், மாற்று சாவி மூலம் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது சுரேஷ் அசைவற்று கிடந்தார். இது குறித்து பெரியமேடு காவல் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சுரேஷ் உடலை பிரேதபரிசோதனைக்காக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர், சுரேஷ் தங்கியிருந்த அறையில் இருந்து ஒரு கடிதம் இருந்தது. அதில், தன் தற்கொலைக்கு காரணம் வேறு யாரும் இல்லை.
என்னுடைய சுய முடிவு. யாரையும் தொந்தரவு செய்ய வேண்டாம்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. தற்கொலைக்கு காதல் பிரச்னையா. பணிச்சுமை காரணமா. உயரதிகாரிகள் திட்டினார்களா உள்ளிட்ட பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.