திருவனந்தபுரம்: சபரிமலையில் மண்டல பூஜை நேற்று நடந்தது. தொடர்ந்து இரவு 9 மணிக்கு கோயில் நடை சாத்தப்பட்டது. இதையடுத்து 41 நாள் நடந்த இவ்வருட மண்டல காலம் நிறைவடைந்தது. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மண்டல காலத்தில் நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் செல்வார்கள். இந்த வருடம் கொரோனா பரவல் காரணமாக மண்டல காலம் களை இழந்தது. கடும் கட்டுப்பாடுகளுடன் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
நவம்பர் 15ம்தேதி இவ்வருட மண்டல கால பூஜைகளுக்காக நடை திறக்கப்பட்டது. இந்நிலையில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நேற்று நடந்தது. முன்னதாக ஆரன்முளா பார்த்த சாரதி கோயிலில் இருந்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட தங்க அங்கி நேற்று முன்தினம் ஐயப்பன் விக்ரகத்தில் அணிவிக்கப்பட்டது. நேற்று மண்டல பூஜைக்கு பின்னர் இரவு 9 மணி அளவில் கோயில் நடை சாத்தப்பட்டது. இதையடுத்து நேற்றுடன் 41 நாள் நடந்த மண்டல காலம் நிறைவடைந்தது.
மீண்டும் மகர விளக்கு பூஜைக்களுக்காக டிசம்பர் 30ம்தேதி மாலை 5 மணி அளவில் நடை திறக்கப்படும். 31ம்தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். அன்று முதல் ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்தி கொரோனா நெகட்டிங் சான்றுடன் வரும் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.