சென்னை: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், கொரோனா தொற்று காரணமாக எதிர்வரும் 2021-ம் ஆண்டில் ஜல்லிக்கட்டு நடத்த கீழ்க்கண்ட கட்டுக்காடுகள் மற்றும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுடன் அரசு அனுமதி அளிக்கிறது.
* ஜல்லிக்கடட்டு, மஞ்சிவிரட்டு மற்றும் வடமாடு நிகழ்ச்சிகளில் மாடுபிடி வீரர்கள் 300 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்படுகிறது.
* எருது விடும் நிகழ்ச்சியில் 150 வீரர்களுக்கு மிகாமல் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்படுகிறது.
* மேற்கண்ட நிகழ்ச்சிகளில் திறந்த வெளியின் அனவிற்கேற்ப சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் அதிகப்பட்சம் 50 சதவிகித அளவிற்கு மிகாமல் பார்வையாளர்கள் கலந்து கொள்ளவும் அனுமதிக்கப்படுகிறது.
* பார்வையாளர்களுக்கு வெப்ப பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்க வேண்டும்.
* ஜல்லிக்கட்டு நிகழச்சியில் மாடுபிடி வீரர்களாக பங்கேற்பவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனை கூட்டத்தில் கொரோனா தொற்று இல்லை என சான்று பெற்றிருக்க வேண்டும்.
* மேலும் நிகழ்ச்சியில் பார்வையாளர்களாக பங்கேற்கும் அனைவரும் முகக்கவசம் அணிவதும் மற்றும் தனிமனித இடைவெளியை கடைபிடிப்பதும் கட்டாயமாக்கப்படுகிறது.
* ஒரு காளையுடன் ஒரு உரிமையாளர் மற்றும் காளையுடன் நன்கு பழக்கமுள்ள ஒரு உதவியாளர் மட்டுமே அனுமதிக்கலாம்.
* காளை உரிமையாளர் மற்றும் உதவியாளருக்கு மாவட்ட நிர்வாகத்தின் அடையாள அட்டை வழங்கப்படும். அடையாள அட்டை இல்லாத நபர்கள் நிகழ்ச்சி நடைபெறும் வளாகத்திற்குள் நுழைய அனுமதியில்லை.
* காளை உரிமையாளர் மற்றும் உதவியாளர் கொரோனா தொற்று இல்லை என சான்று பெற்றிருக்க வேண்டும்.
* ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்களுக்கு நிகழ்ச்சி நடைபெறும் 7 நாட்களுக்கு முன் மாவட்ட நிர்வாகத்தின் அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும். அடையாள அட்டை இல்லாத வீரர்கள் நிகழ்ச்சி நடைபெறும் வளாகத்திற்குள் நுழைய அனுமதியில்லை.
* ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்கள் கொரோனா தொற்று இல்லை என சான்று நிகழ்ச்சி நடைபெறும் இரண்டு நாட்களுக்கு முன்பு பெறப்பட்டவர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
* ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை மேற்பார்வை செய்யும் அனைத்துத்துறை அலுவலர்களும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களும் கொரோனா தொற்று இல்லை என சான்று பெற்றிருக்க வேண்டும்.
* அனைத்துத்துறை அலுவலர்களும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களும் அரசினால் அறிவுறுத்தப்பட்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.