வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு தாலுகாவில் முதியோருக்கான உதவித்தொகை வாங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் தைப்பொங்கல் திருவிழாவையொட்டி தமிழக அரசின் விலையில்லா வேஷ்டி, சேலை வழங்கப்படுகிறது. வத்திராயிருப்பு தாலுகாவில் முதியோர் உதவித்தொகை வாங்குபவர்களில் சிலர் உடல்நலமின்றி இறந்து விடுவார்கள். அதோடு முதியோர் உதவித்தொகை வாங்கிக் கொண்டு இருந்தவர்களில் சிலருக்கு உதவித் தொகை கிடைக்காத நிலை இருந்து வருகிறது. அதே வேளையில் உண்மையிலேயே முதியோர் உதவித் தொகைக்கு பலர் மனுக்கள் அனுப்பியும், கிடைக்காத நிலை இருந்து வருகிறது. இந்நிலையில் தைப்பொங்கலையொட்டி விலையில்லா வேட்டி, சேலை கொடுப்பதற்காக வத்திராயிருப்பு தாலுகா அலுவலகத்திற்கு வந்துள்ளது. ஆனால், தாசில்தாருக்கு புதிதாக ஜீப் ஒன்று தாலுகா அலுவலகத்தில் வந்துள்ளது.
அதனை கடந்த ஆண்டு 2020 பொங்கலுக்கு கொடுக்கப்பட்டுள்ள முதியோருக்கான விலையில்லா வேட்டிகளை வைத்து ஜீப் மீது கவர் செய்யப்பட்டுள்ளது. அரசு கொடுக்கும் விலையில்லா வேட்டிகளை ஜீப் மீது மூடியாக போடப்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடந்த ஆண்டு முதியோர்களுக்கு உரிய முறையில் விலையில்லா வேஷ்டி கிடைத்துள்ளதா என்பதை வத்திராயிருப்பு தாலுகாவில் ஆய்வு செய்ய வேண்டும் என்றும், தாசில்தார் ஜீப் மீது விலையில்லா வேட்டிகளை மூடியாக போட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.