பெ.நா.பாளையம்: கோவை அருகே பட்டப்பகலில் குடியிருப்பு பகுதியில் காட்டு யானை உலா வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.கோவை அடுத்த நரசிம்மநாயக்கன் பாளையம் பூச்சியூர் கிரீன் கார்டனில் சுமார் 200 வீடுகள் உள்ளன. நேற்று காலை 7 மணி அளவில் பொன்னூத்து வனப்பகுதியில் இருந்து ஒற்றை காட்டு யானை குடியிருப்பு நிறைந்த பகுதிக்குள் புகுந்ததது. காலை நேரம் என்பதால், மக்கள் வீட்டின் முன்பு நடமாடி கொண்டிருந்தனர். இந்நிலையில் யானையை பார்த்து அச்சமடைந்த மக்கள் அலறி அடித்துக் கொண்டு வீட்டிற்குள் ஓடி கதவை சாத்திக் கொண்டனர்.
இதைத்தொடர்ந்து வீதி வீதியாக ஒரு மணி நேரமாக அப்பகுதியில் சுற்றிய யானை மீண்டும் வனப்பகுதிக்கு சென்று மறைந்தது. இதில், யானை யாரையும் எந்த தொந்தரவும் செய்ய வில்லை. யானை நடந்து சென்ற காட்சியை பொதுமக்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டனர்.