பூந்தமல்லி: பூந்தமல்லி டிரங்க் சாலையில் ஜெயபால் என்பவர் பிரியாணிக்கடை நடத்தி வருகிறார். முன்னாள் ராணுவ வீரரான இவரும், இவரது நண்பர்களான முன்னாள் ராணுவத்தினரும் சேர்ந்து கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு ஏழைகளும் பிரியாணி சாப்பிட வேண்டும் என்பதற்காக சிக்கன் பிரியாணி 50க்கும், முட்டை பிரியாணி ₹30க்கும் வழங்கினர். இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் கடையின் முன் குவிந்தனர். பின்னர் ஆயிரம் பேருக்கு பிரியாணி வழங்கப்பட்டது.
இதுகுறித்து பிரியாணி வழங்கியவர்கள் கூறியதாவது, “பொதுவாக பிரியாணி தற்போது ₹100க்கு மேல்தான் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. அதனால் நாங்கள் ஏழை மக்களும் கிறிஸ்துமஸ் திருநாளை கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் மிக குறைந்த விலையில் பிரியாணி வழங்கியுள்ளோம். சீரக சம்பா அரிசியில் தரமான பொருட்களை கொண்டு சுவையாக இதை தயாரித்து வழங்கினோம். காவல்துறை அனுமதியுடன் முன்னாள் ராணுவத்தினர் சிலருடன் சேர்ந்து பிரியாணி வழங்கியது மகிழ்ச்சியாய் இருக்கிறது” என்றனர்.