×

பூந்தமல்லி அருகே ஏரியில் மூழ்கி 2 வாலிபர்கள் பலி: ஒருவர் உடல் மீட்பு

திருவள்ளூர்: பட்டாபிராம் தண்டரை மந்தவெளி தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார்(30). தனியார் நிறுவன ஊழியர். தண்டரை வள்ளலார் நகரை சேர்ந்தவர் சதீஷ்(31). டிரைவர். இவருக்கு திருமணமாகி குழந்தை பிறந்து 20 நாட்களே ஆகிறது. இந்நிலையில், நேற்று மாலை சதீஷ்குமார் மற்றும் சதீஷ் உள்பட 6 பேர் பூந்தமல்லி அடுத்த நேமம் கிராமத்தில் உள்ள ஏரியில் குளிக்க சென்றனர். இதில் சதீஷ்குமார் மற்றும் சதீஷ் ஆகிய இருவரும் ஏரியில் குளித்துக்கொண்டே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஏரியில் சதீஷ் மூழ்கினார். அவரைக் காப்பாற்ற சதீஷ்குமார் சென்றுள்ளார். அவரும் தண்ணீரில் மூழ்கினார். இருவரும் தண்ணீரில் மூழ்கியதை பார்த்த மற்ற 4 நண்பர்கள் அதிர்ச்சியடைந்து கூச்சலிடவே அப்பகுதியை சேர்ந்த சிலர் ஏரியில் இறங்கி இரண்டு பேரையும் தேடினர்.

இதில் சதீஷ்குமாரை உடலை மட்டும் மீ்ட்டனர். சதீஷின் உடலை தேடியும் கிடைக்கவில்லை. தகவல் அறிந்ததும் திருவள்ளூர் போலீஸ் டிஎஸ்பி துரைபாண்டியன் உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தீபன்ராஜ் மற்றும் திருவள்ளூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சதிஷை வெகுநேரம் தேடியும் கிடைக்கவில்லை. இரவு நேரமாகிவிட்டதால் மீட்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் திரும்பினர். இதுகுறித்து வெள்ளவேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷோபா தேவி சப்-இன்ஸ்பெக்டர் தீபன்ராஜ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Tags : teenagers ,lake ,Poonamallee , Near Poonamallee Drowning in the lake Kills 2 teenagers: One body recovery
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு