பாட்னா: தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த 6 எம்எல்ஏ.க்கள் நேற்று, அருணாசல பிரதேசத்தில் பாஜ.வுக்கு தாவினர். பீகாரில் ஆளும் கட்சியாக இருக்கும் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், அருணாசலப் பிரதேசத்தில் கடந்தாண்டு அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக புதிய பரிணாமத்தை எட்டியது. அங்கு நடைபெற்ற சட்டப்பேரவை களமிறங்கிய அக்கட்சி, 7 தொகுதிகளை கைப்பற்றியது. மொத்தமுள்ள 60 இடங்களில் பாஜ 41 தொகுதிகளை வென்று ஆட்சி அமைத்துள்ளது. அதற்கு அடுத்த 2வது பெரிய கட்சியாக ஐக்கிய ஜனதா தளம் மாறியது. இந்நிலையில், இக்கட்சியை சேர்ந்த 6 எம்எல்ஏ.க்கள் நேற்று திடீரென பாஜ.வுக்கு தாவினர். இதனால், அருணாச்சலப் பிரதேச அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பீகாரில் பாஜ.வுடன் இணைந்து கூட்டணி ஆட்சி முதல்வராக இருக்கும் நிதிஷ் குமாருக்கு, இதன்மூலம் பாஜ அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது. ஐக்கிய ஜனதா தள எம்எல்ஏ.க்கள் 6 பேர் பாஜ.வுக்கு தாவி விட்டதால், அருணாச்சலப் பிரதேசத்தில் எதிர்க்கட்சிகளின் பலமும் 12 ஆக சரிந்துள்ளது. காங்கிரஸ், தேசிய மக்கள் கட்சி தலா 4 இடங்களையும், ஐக்கிய ஜனதா தளம் தற்போது ஒரு இடத்தையும், சுயேச்சைகள் 3 இடங்களையும் பெற்றுள்ளனர்.