திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மாநகராட்சி மேயராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 21 வயதான ஆர்யா ராஜேந்திரன் என்ற கல்லூரி மாணவி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.கேரளாவில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில், மொத்தமுள்ள 6 மாநகராட்சிகளில் 5ல் இடதுசாரி கூட்டணி வெற்றி பெற்றது. திருவனந்தபுரம் மாநகராட்சியில் இக்கட்சி தான் அதிக வார்டுகளில் வெற்றி பெற்றது. இதையடுத்து, இக்கட்சியை சேர்ந்த ஒருவரை மேயராக தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. இம்முறை மேயர் பதவியை பெண்ணுக்கு ஒதுக்க ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று திருவனந்தபுரத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் ‘மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. இதில், திருவனந்தபுரம் முடவன்முகள் வார்டில் போட்டியிட்ட ஆர்யா ராஜேந்திரனை மேயராக தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. இவர் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி கணிதம் 2ம் ஆண்டு படித்து வருகிறார். இந்திய மாணவர் கூட்டமைப்பின் மாவட்ட நிர்வாகியாகவும் உள்ளார். 21 வயதே ஆகியுள்ள ஆர்யா ராஜேந்திரன் திருவனந்தபுரம் மாநகர மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் இந்தியாவிலேயே வயது குறைந்த மேயர் என்ற சாதனையை படைத்துள்ளார்.