ஷாஜகான்பூர்: உத்தர பிரதேச மாநிலம், பரெய்லி மாவட்டத்தில் உள்ள ஜலாலாபாத் கிராமத்தை சேர்ந்தவர் 35 வயது பெண். கடந்த நவம்பர் 30ம் தேதி மதன்பூர் என்ற இடத்துக்கு இவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, காரில் வந்த 5 பேர் அவரை கடத்திச் சென்று அருகில் உள்ள வயலில் பாலியல் பலாத்காரம் செய்தனர். பின்னர், அவர்கள் தப்பிச் சென்று விட்டனர். இது பற்றி புகார் அளிப்பதற்காக ஜலாலாபாத் காவல் நிலையத்துக்கு அப்பெண் சென்றார். அங்கு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர், அப்பெண்ணை தனது அறைக்கு தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். நீதி கிடைக்கும் என்று நினைத்து காவல் நிலையத்துக்கு வந்தால், அங்குள்ள சப்-இன்ஸ்பெக்டரும் தன்னை பலாத்காரம் செய்ததால் அப்பெண் அதிர்ச்சி அடைந்தார். இந்த சம்பவங்களை பரெய்லி மாவட்ட ஏடிஜி அவினாஷ் சந்திராவை கடந்த புதன்கிழமை சந்தித்து அப்பெண் தெரிவித்தார். அவர் கொடுத்த புகாரை பதிவு செய்த அவினாஷ், ‘‘இச்சம்பவம் பற்றி விசாரிக்கும்படி உத்தரவிட்டு இருக்கிறேன். நடந்த சம்பவங்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில், சப்-இன்ஸ்பெக்டர் உட்பட அனைவரின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார்.