சிதம்பரம்: கடலூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் பஞ்சமூர்த்திகள் வீதியுலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. வரும் 29ம் தேதி தேரோட்டமும், 30ம் தேதி ஆருத்ரா தரிசன விழாவும் நடைபெற உள்ளது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தேரோட்டம் மற்றும் தரிசன விழாவுக்கு வெளியூர் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
உள்ளூர் பக்தர்கள் மட்டுமே கலந்து கொள்ளலாம் எனவும் கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ள நிலையில், விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. வெளியூர் பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை என்பதால் அதற்கேற்ப காவல் துறையினர் பல்வேறு திட்டங்களை வகுத்து வருகின்றனர். திருவிழா தொடர்பாக தீட்சிதர்கள் சமீபத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தபோது, கோயில் உற்சவ பத்திரிகையை கொடுத்து திருவிழாவில் கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்ததாக தீட்சிதர்கள் தெரிவித்து உள்ளனர்.