திருவண்ணாமலை: தந்தை பெரியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று, திருவண்ணாமலையில் உள்ள அவரது உருவ சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பெரும்பான்மை மக்களையும், சிறுபான்மை மக்களையும் மோதவிட்டு, மத கலவரங்களை பாஜ தூண்டி வருகிறது. அதற்கு, தமிழகத்தில் ஆளும் அதிமுக துணை போகிறது. 8 வழிச்சாலை திட்டத்தை மீண்டும் கொண்டுவருவதாக சொல்கிறார். மீண்டும் அதற்கான பணிகள் தொடங்கினால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்த்து போராடும்.
பாஜவின் கட்டாயத்தின் பேரில்தான் ரஜினி அரசியலுக்கு வருவதாக சொல்கிறார்கள். அதிமுகவின் எதிர்ப்பு ஓட்டுகளை பிரிப்பதற்காக அரசியலில் இறக்குவதாகவும் பேச்சு இருக்கிறது. அதிமுக, பாஜ எதிர்ப்பில் மக்கள் உறுதியாக உள்ளனர். நடிகர்கள் மட்டுமல்ல, யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால், அதிமுக, பாஜ கூட்டணியை யாராலும் பாதுகாக்க முடியாது. மதசார்பற்ற திமுக கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதுதான் எங்களுடைய இலக்கு. ஊழல் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதற்காக மத்திய அரசுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாக இருக்கிறார். எனவே, மந்திரிகள் மீதான ஊழல் புகார்கள் மீது ஆளுநர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.