மும்பை: சட்டவிரோத கட்டுமான பணி தொடர்பான வழக்கில் நடிகை கங்கனாவின் மனுவை மும்பை சிவில் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பை கார் பகுதியில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்திற்கு சொந்தமான வீட்டில் சட்டவிரோத கட்டுமான பணிகள் நடந்துள்ளதாக கூறி மும்பை மாநகராட்சி 2018ம் ஆண்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்த நோட்டீசை எதிர்த்து கங்கனா தின்தோஷியில் உள்ள சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். மேலும் அதில் தனது வீட்டை இடிக்க மாநகராட்சிக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார். அதனால், விசாரணை முடியும் வரை கங்கனாவின் வீட்டை இடிக்க மாநகராட்சிக்கு நீதிமன்றம் தடை விதித்தது.
இந்நிலையில் இவ்வழக்கு நீதிபதி சவான் முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது, கங்கனாவின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் இந்த உத்தரவை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய கங்கனாவுக்கு 6 வாரம் கால அவகாசம் வழங்கி உள்ளார். முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன் சட்டவிரோத கட்டுமான பணிகள் நடந்ததாக கூறி பாந்திரா பாலி ஹில் பகுதியில் உள்ள கங்கனாவின் பங்களா வீட்டின் ஒரு பகுதியை மாநகராட்சி இடித்து தள்ளியது. ஆனால் நடிகையின் வீட்டை இடித்தது சட்டவிரோதம் என்று மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.