×

தமிழகத்தில் முதல்கட்டமாக 5 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்காக 21 ஆயிரம் நர்சுகளுக்கு பயிற்சி : ராதாகிருஷ்ணன் பேட்டி!!

சென்னை : பிரிட்டனில் இருந்து இதுவரை தமிழகம் வந்தவர்களில் மொத்தம் 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- ஏற்கனவே சென்னையை சேர்ந்தவருக்கு கொரோனா உறுதியான நிலையில் மேலும் 4 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புதிதாக சென்னை, மதுரையை சேர்ந்த தலா ஒருவருக்கும், தஞ்சையை சேர்ந்த 2 பேருக்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு தனிப்பிரிவுகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. 5 பேருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என வந்துள்ளது.

இதுபோன்ற பெரிய பாதிப்புகள் ஏற்படும் என்ற போதும் பொதுமக்கள் யாரும் முகக்கவசம் அணிவது இல்லை. குறிப்பாக பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பெரும்பாலானோர் முகக்கவசம் அணிவதில்லை. அவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். சென்னை விமான நிலையத்தில் நிரந்தர கொரோனா பரிசோதனை மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இங்கிலாந்தை போல தென் ஆப்பிரிக்காவில் இருந்து வருபவர்களையும் கண்காணித்து வருகிறோம்.

தமிழகத்தில் முதல்கட்டமாக 5 லட்சம் சுகாதார பணியாளரர்கள், முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும். அவர்களின் விவரங்களை சேகரித்துள்ளோம். கொரோனா தடுப்பூசி போடுவதற்காக 21 ஆயிரம் நர்சுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. கொரோனா பரிசோதனைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்காதவர்கள் மீது இனிமேல் வழக்கு தொடரப்படும், என தெரிவித்துள்ளார்.

Tags : nurses ,phase ,interview ,Radhakrishnan ,Tamil Nadu , Corona, Vaccine, Radhakrishnan, Interview
× RELATED 4ம் கட்ட தேர்தல் 96 தொகுதியில் மனு தாக்கல் துவக்கம்