×

இந்தியாவை வலிமையாகவும், செழுமையாகவும் மாற்ற வாஜ்பாய் மேற்கொண்ட முயற்சிகள் எப்போதும் நினைவுகூறப்படும் : பிரதமர் மோடி புகழாரம்!!

டெல்லி : முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் 96வது பிறந்த நாளையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மறைந்த முன்னாள் பிரதமருமான அடல் பிகாரி வாஜ்பாய் 1998 முதல் 1999 வரை, 1999- 2004 வரை என பாஜக ஆட்சியில் பிரதமராக இருந்தவர். லோக்சபாவிற்கு, 10 முறையும், ராஜ்யசபாவுக்கு, இரு முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.வெளியுறவுத் துறை அமைச்சராகவும் பணியாற்றி உள்ளார். நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னாவுக்கு சொந்தக் காரரான இவர் கடந்த 2018ம் ஆண்டு காலமானார்.

இந்நிலையில் வாஜ்பாயின் 96வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.மேலும் வாஜ்பாயின் பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி ட்விட்டரில் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

அதில் “ வாஜ்பாயின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமை, தேசத்தை வளர்ச்சிப்பாதையில் கொண்டு சென்று, எப்போதுமில்லாத வளர்ச்சியை எட்ட உதவியது. இந்தியாவை வலிமையாகவும், செழுமையாகவும் மாற்ற வாஜ்பாய் மேற்கொண்ட முயற்சிகள் எப்போதும் நினைவுகூறப்படும்” எனத் தெரிவித்துள்ளார். இதற்கிடையே வாஜ்பாயின் வாழ்க்கை, பொதுவாழ்க்கையில் அவரின் பணிகள், நாடாளுமன்றத்தில் அவர்ஆற்றிய சிறப்பான உரைகள்,புகைப்படங்கள், ஆகியவை அடங்கிய நூலை பிரதமர் மோடி இன்று வெளியிடுகிறார்.

Tags : Vajpayee ,Modi ,India , Vajpayee, Prime Minister Modi, praise
× RELATED I.N.D.I.A. கூட்டணி மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமர் மோடி