×

அவதிப்படும் அஷ்வின், நடராஜன்: கடுப்பில் கவாஸ்கர்

மும்பை: ‘இந்திய கிரிக்கெட்டில் வீரர்களுக்கு ஏற்ப, ஆளுக்கொரு விதி இருப்பதால் நேர்மையாக இருக்கும் அஷ்வின், நடராஜன் ஆகியோர் பாதிக்கப்படுகின்றனர்’ என்று கவாஸ்கர் கடுப்புடன் விமர்சனம் செய்துள்ளார். ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் விளையாட சென்ற கேப்டன் விராத் கோஹ்லி. தனது முதல் குழந்தை பிறப்புக்காக, மனைவியுடன் இருக்க வேண்டும் என்ற நோக்கத்துக்காக தாயகம் திரும்பியுள்ளார். அவரது இந்தச் செயல், ‘இந்திய அணியை நட்டாற்றில் விட்டுவிட்டு சொந்த வேலையை பார்க்க சென்று விட்டதை’ போல் விமர்சனம் செய்யப்படுகிறது.

உலகில் தந்தையாகும் எந்த ஆணுக்கும் இருக்கும் இயல்பான மனநிலையில்தான் கோஹ்லியும் இருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் கூட, தனது முதல் குழந்தை பிறப்புக்காக போட்டிகளுக்கு இடையில் விடுப்பு எடுத்து சொந்த ஊர் சென்றார். அதனால் கோஹ்லியை  விமர்சனம் செய்வதில் கொஞ்சமும் நியாயமில்லை என்பது பலரின் கருத்து. ஒருவரை மட்டுமே நம்பி ஒட்டுமொத்த அணியும் இருப்பது, இந்திய அணியின் பலவீனத்தை வெளிப்படையாக காட்டுகிறது என்றும் விமர்சிக்கப்படுகிறது.

ஆனால் கோஹ்லியை போலவே மற்றவர்களுக்கு, வேண்டிய போது ஓய்வு கிடைக்குமா? அப்படி தந்தால் மீண்டும் விளையாட அழைப்பார்களா? என்ற கேள்விகளையும் ஒதுக்குவதற்கில்லை. அப்படி சில கேள்விகளைதான் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரர் சுனில் கவாஸ்கர் கேட்டுள்ளார். அவர் அளித்த பேட்டி ஒன்றில், ‘இந்திய கிரிக்கெட்டில் ஒவ்வொரு வீரருக்கும் ஒவ்வொரு விதி இருக்கிறது. அஷ்வின் திறமையான சுழற்பந்து வீச்சாளர். நேர்மையாக இருப்பதாலேயே அவர் எப்போதும் ஆடும் அணியில் இடம் பிடிக்க போராட வேண்டி இருக்கிறது. அதற்கு காரணம் அவர் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுவதுதான். ஒரு ஆட்டத்தில் விக்கெட் எடுக்கவில்லை என்றால் அடுத்த ஆட்டத்தில் அவர் ஓரங்கட்டப்படுவார். ஆனால் சில பேட்ஸ்மேன்கள் சரியாக ஆடாவிட்டாலும் தொடர்ந்து ஆடும் அணியில் இருப்பார்கள்.

அதேபோலதான் டி.நடராஜன் நிலைமையும். அவருக்கு ஐபிஎல் போட்டி நடக்கும் போது குழந்தை பிறந்தது. போட்டி நடந்த ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து நேரடியாக ஆஸ்திரேலியா அழைத்துச் செல்லப்பட்டார். இன்னும் அவரது மகளை பார்க்கவில்லை. ஆனால் மற்ற வீரர்கள் நினைத்த நேரத்தில் அணியில் இருந்து விலகுகிறார்கள். விரும்பிய நேரத்தில் மீண்டும் அணியில் சேர்ந்து விடுகின்றனர்’ என்று கடுமையாகவும், கடுப்புடனும் விமர்சித்துள்ளார். கவாஸ்கர் 1976ம ஆண்டு நியூசிலாந்தில் சுற்றுப்பயணத்தில் இருந்தார். அப்போது அவருக்கு குழந்தை பிறந்தது. அதனால் அவர் நாடு திரும்ப விரும்பினார். ஆனால் உடனடியாக வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்ய வேண்டி இருந்ததால் பிசிசிஐ அதற்கு அனுமதி அளிக்கவில்லை. அதனால் இரண்டரை மாதங்கள் கழித்துதான் தனது மகனை பார்த்தார்.

Tags : Natarajan ,Gavaskar , Suffering Ashwin, Natarajan: Gavaskar under pressure
× RELATED ₹1.50 லட்சம் கொள்ளை